/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
வாங்கி போட்ட வீட்டு மனைகள் உதவியாக இருந்தன!
/
வாங்கி போட்ட வீட்டு மனைகள் உதவியாக இருந்தன!
PUBLISHED ON : ஜன 30, 2026 03:09 AM

நாகப்பட்டினம் மாவட்டம், ஏனங்குடி ஊராட்சியை சேர்ந்த, ஜி.சத்தியமூர்த்தி: நான் தான் வீட்டில் மூத்தவன். எனக்கு ஒரு தம்பி, ஒரு தங்கை. எங்களுடையது, நடுத்தர விவசாய குடும்பம். வீட்டில் பணக்கஷ்டம் இருந்தாலும், அந்த கஷ்டம் தெரியாமல், எங்களை பெற்றோர் வளர்த்தனர்.
அரசு பள்ளியில் படித்து, கல்லுாரி படிப்பை தனியார் கல்லுாரியில் முடித்தேன். ஆசிரியராக இருந்த என் தாய்மாமா கோவிந்தசாமி தான் என் வழிகாட்டி.
அரசு மற்றும் வங்கி வேலைக்காக தேர்வுகள் எழுதினேன்; ஆனால், வெற்றி பெற முடியவில்லை. ராணுவத்தில் சேர வேண்டும் என்பது என் கனவாக இருந்தது. அதற்குரிய தேர்வுகளில் வெற்றி பெற்று, ஒரு சில உடல் உபாதை காரணங்களால் சேர முடியவில்லை.
பின், நண்பர் ஒருவரின் உதவியுடன், துபாய் சென்று சம்பாதிக்க ஆரம்பித்தேன். பொருளாதாரத்தில் சிறிது முன்னேறினேன்.
விவசாய வருமானத்துடன், என் வருமானமும் தந்தைக்கு உதவியாக இருந்தது. ஓட்டு வீட்டை இடித்து மாடி வீடு கட்டினோம். தம்பியை ஓவிய கல்லுாரியிலும், தங்கையை ஆசிரியர் பயிற்சி பள்ளியிலும் படிக்க வைத்தோம். அனைத்திலும் என்னுடன் இருந்து, எனக்கான ஆலோசனைகளை கூறினார் மாமா.
என் பொறுப்புகள் முடிந்த பின், எனக்கான சேமிப்பை துவங்கினேன். என் வழிகாட்டியாக இருந்த என் தாய்மாமா, தன் மகளையே எனக்கு திருமணம் செய்து கொடுத்தார். எங்களுக்கு இரு பெண் குழந்தைகள். மாமாவின் ஆலோசனைப்படி, நகரத்துக்கு அருகே புதிதாக துவங்கி இருந்த வீட்டு மனை பிரிவுகளில், குறைந்த விலையில் சில மனைகளை வாங்கினேன்.
அந்த மனைகள் ஒவ்வொரு ஆண்டும் விலையேறும் போது என் மாமா, அதுகுறித்து என்னிடம் தெரிவிப்பார். அது எனக்கு ஊக்கமாக இருந்தது. 'நமக்கு ஒரு நல்ல சொத்து இருக்கிறது' என்று நிம்மதியாக உணர்ந்தேன்.
என் தந்தை இருந்தவரை குடும்ப பொறுப்பு, கவலைகள் எதுவும் இல்லாமல், எதுவாக இருந்தாலும் அப்பா பார்த்துக் கொள்வார் என்று அலட்சியமாக இருந்தேன். திடீரென்று என் தந்தை காலமானதும், கை ஒடிந்தது போல் உணர்ந்தேன்.
நானும் வெளிநாட்டில் இருந்து, ஊருக்கு வந்து வசிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. சொந்தமாக ஒரு தொழில் ஆரம்பித்து, நல்லபடியாக நடத்தி வருகிறேன். குடும்ப செலவுகளை சமாளிக்கும் வகையில், வருமானமும் ஈட்ட முடிகிறது.
அன்று, மாமாவின் ஆலோசனைப்படி வாங்கி போட்ட வீட்டு மனைகள் காலப்போக்கில் விலை உயர்ந்து, மகளின் கல்லுாரி படிப்பு, திருமணம், நான் தொழில் துவங்க, என எல்லா வகையிலும் உதவியாக இருந்தது.
எனக்கான நிதி வழிகாட்டி, ஆலோசகர் எப்போதும் என் மாமா தான்!

