PUBLISHED ON : ஜூலை 08, 2026 12:00 AM

ஹிந்து தமிழர் கட்சி தலைவர் ராம.ரவிகுமார் அறிக்கை:
ஒரு மாநிலத்தில் அரசியலமைப்பு சட்டம் முறையாக செயல்படுகிறதா என்பதை உறுதி செய்வதும், மாநில நிர்வாகத்தின் நிலை குறித்து அறிந்து கொள்வதும், தேவையான தகவல்களை அரசிடம் கோருவதும், அவசர சூழ்நிலையில் அரசாணை பிறப்பிப்பதும், கவர்னருக்கு அரசியலமைப்பு சட்டம் வழங்கிய அதிகாரங்களாகும். ஆனால், 'கவர்னருக்கு அதிகாரமே இல்லை' என த.வெ.க.,வினர் கூறுவது, அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை அமைப்பையே மறுக்கும் கருத்தாகும்.
த.வெ.க., அமைச்சர்களுக்கு தங்களது அதிகாரம் குறித்தே இன்னும் தெரியலை... இதுல, கவர்னருக்கான அதிகாரங்கள் பத்தி எப்படி தெரிஞ்சு வச்சிருப்பாங்க?
அ.தி.மு.க.,வை சேர்ந்த முன்னாள் அமைச்சர் உதயகுமார் பேட்டி:
முதல்வர் விஜய்க்கு புகழ் பாடுவதில் அவரது தோழமை கட்சிகளிடையே கடும் போட்டியே நடக்கிறது. 'எதிரிகளிடம் இருந்து விஜய்க்கு வரும் அம்புகளுக்கு கவசமாக இருப்போம்' என்று விசுவாசத்திற்கு புதிய விலாசம் தந்துள்ளார் ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ.
ஏற்கனவே இருந்த இடத்தை தாறுமாறா திட்டுவதும், இப்ப இருக்கும் இடத்துக்கு அநியாயத்துக்கு விசுவாசம் காட்டுவதும் வைகோவுக்கு புதுசா என்ன?
அ.தி.மு.க., அமைப்பு செயலர் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ., பேட்டி:
கன்னியாகுமரி மாவட்டம், மணவாளக்குறிச்சி மணல் ஆலைக்கு அரிய வகை கனிமங்கள் எடுப்பதற்கு, மத்திய சுரங்க அமைச்சகம் 2,821 ஏக்கர் நிலத்தை ஒதுக்கீடு செய்தது. இதை தொடர்ந்து, தமிழக தொழில் துறை கூடுதல் தலைமை செயலர், அரிய வகை கனிமவளம் எடுப்பதற்கான முன் ஒப்புதல் கடிதத்தை மண வாளக்குறிச்சி மணல் ஆலைக்கு வழங்கினார். இதை, அப்போதைய தி.மு.க., ஆட்சி எதிர்க்கவில்லை. தற்போது இத்திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பது, அவர்களது இரட்டை நிலைப்பாட்டை காட்டுகிறது.
'ஆட்சியில் இருந்து இறங்கிட்டா, ஆளுங்கட்சி எது செஞ்சாலும் எதிர்க்கணும்' என்று தி.மு.க.,வினர் சபதம் ஏதும் போட்டிருப்பாங்களோ?
பா.ஜ., தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி:
தமிழக அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்களுக்கு என்ன செய்ய வேண்டும், எப்படி செய்ய வேண்டும் என்பதே தெரியவில்லை. 'அரசு அனுமதி இல்லாமல் கவர்னரை அதிகாரிகள் சந்திக்கக்கூடாது; கவர்னர் ஆய்வு நடத்தக் கூடாது' என, தமிழக மின்துறை அமைச்சர் நிர்மல்குமார் கூறியது வருத்தத்துக்குரியது. அரசியல் சட்டம் 167வது பிரிவின்படி மத்திய, மாநில அரசு அலுவல் களை ஆய்வு செய்ய கவர்னருக்கு உரிமை உள்ளது.
ஆனா, பா.ஜ., ஆளும் மாநிலங்களில் எல்லாம் கவர்னர்கள் ஏன் ஆய்வு நடத்த மாட்டேங்கிறாங்க?
