PUBLISHED ON : மார் 01, 2026 03:09 AM

தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை பேச்சு: அந்தந்த கட்சியினர்
அவர்களது கட்சிக்குத்தான் ஓட்டு போடுவர். பொதுமக்கள் தான், நடுநிலையோடு
முடிவு செய்து ஓட்டளிப்பர். தமிழகத்தில் இருண்ட ஆட்சி நடக்கிறது. 2006ம்
ஆண்டில் இருந்து 2011 வரை நடந்த தி.மு.க., ஆட்சிக்கு மக்கள் தண்டனை
கொடுத்தனர். அடுத்த, 10 ஆண்டுகள் அவர்களால் ஆட்சிக்கு வர முடியவில்லை.
ஆனால், 2021ல் மீண்டும் தி.மு.க., ஆட்சிக்கு வந்தபின், அதைவிட கொடுமையான
ஆட்சியாக உள்ளது. நடுநிலை ஓட்டுகள் இவங்க அணிக்கு கிடைக்கும்னு பார்த்தால்,
அதையும் பங்கு போட தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் காத்திருக்காரே!
தமிழக ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியசாமி பேட்டி: தி.மு.க., ஆட்சியில் அனைத்து கிராமங்களுக்கும் தேவையான அடிப்படை வசதிகள், 100 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளன. சட்டம் - ஒழுங்கு சிறப்பாக கையாளப்படுகிறது. பெண்கள் பாதுகாப்பு குறித்து நடிகர் விஜய் விமர்சித்துள்ளார். இந்தியாவிலேயே தமிழகம் தான், பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக உள்ளது. இதனால், மீண்டும் தி.மு.க., தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்.
கிருஷ்ணகிரி அருகே, இரண்டரை வயது பெண் குழந்தையை தி.மு.க., இளைஞர் அணி நிர்வாகி, பாலியல் பலாத்காரம் செய்து கொலை செஞ்சிருக்காரே...
இதுதான் பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பான மாநிலமா?
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் தங்கமணி பேட்டி: கோடை காலம் ஆண்டுதோறும் தான் வருகிறது. இன்னும் ஒரு மாதத்தில் தேர்தல் வரவுள்ளதால், மூன்று மாதங்களுக்கான மகளிர் உரிமைத் தொகை, 3,000த்துடன், கோடை காலத்துக்கு, 2,000 ரூபாய் ஊக்கத்தொகை போட்டுள்ளனர். தி.மு.க.,வினருக்கு தேர்தல் பயம் வந்துவிட்டதால் தான், 5,000 ரூபாய் வழங்கியுள்ளனர்; இது, மக்களிடம் எடுபடாது.
'குடும்பத்துக்கு தலா, 10,000 ரூபாய், வருஷத்துக்கு மூணு காஸ் சிலிண்டர் இலவசம், மகளிர் உரிமைத்தொகை, 2,000 ரூபாயாக உயர்த்து வோம்'னு இவரது தலைவர் பழனிசாமி, 'அள்ளி விட்டது' எல்லாம் தேர்தல் பயத்தில் இல்லையா? தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மகேஷ் பேட்டி: தேர்தல் நேரத்தில், ஒவ்வொரு கட்சியும் வாக்குறுதிகள் தரும். அதில் அதிகப்படியான நம்பிக்கை யார் மீது இருக்கிறதோ, அவர்களுக்கு தான் மக்கள் ஓட்டு போடுவர். தமிழக மக்களின் மனநிலை அறிந்து முதல்வர் ஆட்சி செய்து வருகிறார்.
இவங்க, 2021ல் தந்த எல்லா வாக்குறுதிகளையும் நிறைவேற்றி, மக்கள் நம்பிக்கையை பெறலையே... அதனால, 2026ல் தரும் வாக்குறுதிகளை மக்கள் நம்புவாங்களா?

