PUBLISHED ON : பிப் 25, 2026 03:20 AM

அ.தி.மு.க.,வைச் சேர்ந்த சுகாதாரத் துறை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்
பேட்டி: விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்த காவிரி, வைகை,
குண்டாறு இணைப்பு திட்டம், அ.தி.மு.க., ஆட்சிக் காலத்தில் கொண்டு
வரப்பட்டது. ஆனால், ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின், அந்த திட்டத்திற்கு
எந்தவிதமான நிதியும் ஒதுக்காமல், திட்டத்தை தி.மு.க., அரசு முடக்கியது
வேதனையை அளிக்கிறது. காவிரி, வைகை, குண்டாறு திட்டத்தை தி.மு.க., அரசு
நிறைவேற்றி இருந்தால், 'அது எங்க திட்டம்'னு இவங்க பெருமை
அடிச்சிருப்பாங்களே... அதை தவிர்க்கவே, அந்த திட்டத்தை கிடப்புல
போட்டிருப்பாங்க!
பா.ஜ., - ஓ.பி.சி., அணியின் தமிழக தலைவர் வீர திருநாவுக்கரசு பேச்சு: தமிழகம் முழுதும், ஆதிதிராவிடர் பள்ளிகளில் அடிப்படை வசதிகள் இல்லை. ஆனால், மகளிருக்கு கோடைக்கால சிறப்பு நிதி என, 2,000 ரூபாய் கொடுத்து உள்ளனர். இது, 'கோடைக்கால நிதியில்லை; தேர்தல் கால சிறப்பு நிதி' என, மக்கள் கூறுகின்றனர். குறிப்பாக, பட்டியல் சமுதாய மக்களுக்காக மத்திய அரசு கொடுத்த நிதியை, அவர்களுக்கான திட்டங்களுக்கு பயன்படுத்தாமல், தேர்தல் அரசியலுக்காக தி.மு.க.,வினர் பயன்படுத்துவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
மத்திய அரசின் திட்டங்களுக்கு, 'ஸ்டிக்கர்' ஒட்டியவங்க, கடைசியா மத்திய அரசின் நிதிக்கும், 'ஸ்டிக்கர்' ஒட்டிட்டாங்களே!
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சண்முகம் பேச்சு: விரைவில் தேர்தல் தேதி அறிவிப்பு வர உள்ளதால், தி.மு.க., ஆட்சியின் ஆயுள் ஒரு வாரத்தில் முடியப் போகிறது. தமிழகத்தில் 1967ம் ஆண்டு முதல், அ.தி.மு.க., - தி.மு.க., தான் ஆட்சிக்கு வரும் கட்சிகள். தற்போது, 'அவர் வந்து விட்டார்; இவர் வந்து விட்டார்' என ஊடகங்கள் சொல்வது, வியாபாரத்துக்கான பிரசாரங்கள் தான். ஆனால், கள நிலவரம் அப்படி இல்லை.
'எங்க ரெண்டு கட்சிகள் தவிர, மூணாவது கட்சியை கோட்டை பக்கமே விட மாட்டோம்'னு சொல்றாரோ?
தமிழக சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் பேச்சு: கடந்த, 2024ம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்காக, ஓராண்டு கடுமையாக உழைத்து, 40 தொகுதிகளிலும் நம் கூட்டணி வெற்றி பெற்றது. கொரோனா காலத்தில் முதல்வராக பதவியேற்ற ஸ்டாலின், அன்று முதல் ஓடிக் கொண்டு தான் இருக்கிறார். அவர் மட்டுமல்ல; எங்களையும் மக்களோடு மக்களாக இருக்க வேண்டும் என, ஓட வைத்து கொண்டிருக் கிறார்.
'ஓடி ஓடி உழைக்கணும்' என்ற எம்.ஜி.ஆர்., பாடல் வரிகளை, அ.தி.மு.க.,வினரை விட தி.மு.க.,வினர் தான் முறையா கடைப்பிடிக்கிறாங்க போலும்!

