PUBLISHED ON : செப் 07, 2026 01:43 AM

அ.தி.மு.க.,வைச் சேர்ந்த, முன்னாள் அரசு கொறடா கோவிந்தராஜன் இல்ல திருமண விழா, சமீபத்தில் தஞ்சையில் நடந்தது. இதில், அக்கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி பங்கேற்று, மணமக்களை வாழ்த்தினார்.
இந்நிகழ்ச்சியில், பழனிசாமி காரசாரமாக அரசியல் பேசுவார் என தொண்டர்களும், நிர்வாகிகளும் எதிர்பார்த்தனர். ஆனால், 'சட்டசபை கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்பதால், சீக்கிரம் கிளம்ப வேண்டும்' எனக் கூறி, மணமக்களை ஒரு சில நிமிடங்கள் மட்டும், வாழ்த்தி பேசிவிட்டு, விரைவாக கிளம்பி விட்டார்.
இதை பார்த்த நிர்வாகி ஒருவர், 'இந்த மாதிரி திருமண விழாக்கள்ல எதிர்க்கட்சிகளை சரமாரியா விமர்சனம் பண்ணி பேசுவாரே... இன்னைக்கு சத்தம் காட்டாம போயிட்டாரே' என முணுமுணுத்தார்.
உடனிருந்த சக நிர்வாகியோ, 'இங்க பேசினா எடுபடாது... சட்டசபையில் பேசினா தான், நேரலையா மக்கள் கவனத்துக்கு போகும்னு நினைச்சு கிளம்பிட்டார் போலும்' என்றபடியே, அங்கிருந்து நகர்ந்தார்.
