PUBLISHED ON : ஏப் 16, 2026 12:00 AM

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி காங்., வேட்பாளர் சரவணகுமாரை ஆதரித்து, உத்தப்புரத்தில் சமீபத்தில் பிரசார கூட்டம் நடந்தது.
இதில், சேடபட்டி ஒன்றிய தி.மு.க., செயலர் ஜெயசந்திரன் பேசும்போது, 'அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., அய்யப்பன் இங்கு வந்து, 'மண்டபம் கட்டி கொடுத்தேன்' என்பார். அவர் சொந்த பணத்தை போட்டு செய்யவில்லை; 'நமக்கு நாமே' திட்டத்தில், முதல்வர் ஸ்டாலின் கொடுத்த நிதியில் தான் கட்டினார்.
'போன மாசம் சட்டசபையில் ஸ்டாலினை புகழ்ந்து பேசிய அய்யப்பன், தி.மு.க.,வில் சேர்ந்தார். 'சீட்' தராததால், மூன்றே நாளில் சசிகலா கட்சிக்கு சென்று விட்டார். ஏன் எங்களுக்கெல்லாம் சீட் கேட்க ஆசை இல்லையா? நமது, 20 ஆண்டு கால கூட்டணியான காங்கிரஸ் கட்சிக்கு தொகுதியை ஒதுக்கி விட்டதால், சரவணகுமாரை வெற்றி பெற வைக்க வேண்டும்' என்றார்.
இதை கேட்ட தொண்டர் ஒருவர், 'இவரை மாதிரி தீவிர விசுவாசிகள் இருக்கும் வரை, நம்ம கட்சியை அசைக்கவே முடியாதுப்பா...' என, முணுமுணுத்தபடியே நகர்ந்தார்.

