PUBLISHED ON : ஜன 10, 2026 03:28 AM

ஜனவரி 10:
கேரள மாநிலம், கொச்சி அருகில் உள்ள கட்டசேரியில், அகஸ்டின் ஜோசப் - அலைஸ்குட்டி தம்பதியின் மகனாக, 1940ல் இதே நாளில் பிறந்தவர் கே.ஜே.ஜேசுதாஸ்.
இவர், செவ்விசை கலைஞரான தன் தந்தையிடமும், திருப்புனித்துறை அகாடமி, வேச்சூர் ஹரிகர சுப்பிரமணிய அய்யர், செம்பை வைத்தியநாத பாகவதர் உள்ளிட்டோரிடமும் கர்நாடக இசை, ஹிந்துஸ்தானி இசையை கற்றார்.
மலையாளத்தில், கால்பாடுகள் படத்தில் அறிமுகமாகி, தமிழில், கொஞ்சும் குமரி, ஹிந்தியில், ஜெய் ஜவான் ஜெய் கிசான் படங்களின் வழியே பிற மொழி பாடகராகி, அனைத்து இந்திய மொழிகளிலும், 40,000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். கேரள அரசின் சங்கீத நாடக அகாடமியின் தலைவர், வெளிநாடுகளுக்கான கலாசார துாதுவராக நியமிக்கப்பட்டார்.
கர்நாடக மாநிலம், கொல்லுார் மூகாம்பிகை கோவிலில் தொடர்ந்து பாடி, மத பேதங்களை உடைத்தவர், 'ஹரிவராசனம்' பாடலை சபரிமலை சுவாமி அய்யப்பனுக்கு அர்ப்பணித்துள்ளார். எட்டு தேசிய விருதுகளுடன், 'பத்ம பூஷண், பத்ம விபூஷண்' உள்ளிட்ட விருதுகளையும் பெற்றுள்ளார்.
இவர், தமிழில் பாடிய, 'விழியே கதையெழுது, மலரே குறிஞ்சி மலரே, தண்ணித் தொட்டி தேடிவந்த, ராஜராஜ சோழன் நான், செந்தாழம் பூவில்' உள்ளிட்ட பாடல்கள் இன்றும் இனிப்பவை.
இவரது, 86வது பிறந்த தினம் இன்று!

