PUBLISHED ON : ஆக 28, 2025 12:00 AM

ஆகஸ்ட் 28, 1934
சென்னையில், கர்நாடக இசை கலைஞர் பார்த்தசாரதி - லட்சுமியின் மகளாக, 1934ல் இதே நாளில் பிறந்தவர் ஏ.பி.கோமளா.
இவர், தந்தையிடம் கர்நாட க சங்கீதம் கற்று, சிறுவயதிலேயே வானொலி கலைஞரானார். தெலுங்கை தாய்மொழியாக கொண்டிருந்தாலும், தமிழ், மலையாளம், கன்னட மொழிகளில் மெல்லிசை பாடல்களை பாடினார். பின்னணி பாடகி கே.வி.ஜானகி உதவியுடன், சி.ஆர்.சுப்புராமன், எஸ்.எம்.சுப்பையா நாயுடு ஆகியோர் இசையமைத்த, வேலைக்காரி திரைப்படத்தில், 'உலகம் பலவிதம்' என்ற பாடலை பாடி, பின்னணி பாடகியானார்.
விஜயகுமாரி படத்தில், வைஜெயந்தி மாலாவுக்காக இவர் பாடிய, 'லாலு லாலு' என்ற பாடல் புகழ் பெற்றது. தொடர்ந்து, தங்கப்பதுமை, தங்கமலை ரகசியம், கள்வனின் காதலி, உத்தம புத்திரன் உள்ளிட்ட பல படங்களில் பாடினார்.
இவர் பாடிய, 'சர்க்கரை பந்தலில், மாதா பிதா குரு தெய்வம், முத்தே பவளமே' உள்ளிட்ட பாடல்கள் இன்றும் இனிக்கும். திரையில் பின்னணி பாடல் அறிமுகமான காலத்தில் திரையுலகில் நுழைந்து, 1970 வரை, தென்மாநில மொழி படங்களில் பின்னணி பாடகியாக ஜொலித்தார்.
தமிழக அரசின், 'கலைமாமணி' உள்ளிட்ட விருதுகள் பெற்றவர், தன், 89வது வயதில், 2024, ஏப்ரல் 26ல் மறைந்தார்.
இவரது பிறந்த தினம் இன்று!