'டீப் பேக்' உத்தியை பயன்படுத்தி ஹாங்காங்கில் ரூ.207 கோடி 'அபேஸ்'
'டீப் பேக்' உத்தியை பயன்படுத்தி ஹாங்காங்கில் ரூ.207 கோடி 'அபேஸ்'
UPDATED : பிப் 09, 2024 02:45 PM
ADDED : பிப் 09, 2024 12:04 AM

ஹாங்காங்: 'டீப் பேக்' எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப மோசடி வாயிலாக, ஹாங்காங்கைச் சேர்ந்த நிறுவனம் 207 கோடி ரூபாயை இழந்துள்ளது.
டீப் பேக் எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப மோசடியை பயன்படுத்தி, பிரபலங்களின் முகத்தை வேறு நபர்களின் உடலுடன் பொருத்தி, 'வீடியோ' மற்றும் புகைப்படங்கள் வெளியாகி வருகின்றன. இதன் அடுத்தக்கட்ட பாய்ச்சலாக, மிகப் பெரிய பொருளாதார குற்றங்களுக்கும் இந்த டீப் பேக் பயன்படத் துவங்கிஉள்ளது.
குறுஞ்செய்தி
சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங்கின் பிரபல நிறுவனத்தில், நிதிப் பிரிவில் பணியாற்றி வரும் ஊழியரின் மொபைல் போனுக்கு கடந்த மாதம் குறுஞ்செய்தி ஒன்று வந்தது. செய்தியை அனுப்பியவர், பிரிட்டனில் உள்ள அந்நிறுவனத்தின் தலைமையகத்தில் இருக்கும் தலைமை நிதி அதிகாரி.
உடனடியாக, வீடியோ அழைப்பு வாயிலாக மீட்டிங்கில் பங்கேற்கும்படி அறிவுறுத்தப்பட்டு இருந்தது. உயரதிகாரியே கூறியதால், அந்த குறுஞ்செய்தியில் இருந்த லிங்கை கிளிக் செய்த ஊழியர், வீடியோ மீட்டிங்கில் பங்கேற்றார். அந்த அழைப்பில், தலைமை நிதி அதிகாரியை தவிர, அந்நிறுவனத்தில் இவருக்கு நன்கு பழக்கமான வேறு சில ஊழியர்களும் இருந்தனர்.
வழக்கம் போல மீட்டிங் விறுவிறுப்பாக நடந்தது. அந்த மீட்டிங்கின் போது, தலைமை நிதி அதிகாரி உத்தரவுக்கு இணங்க, ஹாங்காங்கில் உள்ள 15 வங்கிக் கணக்குகளுக்கு, 207 கோடி ரூபாய் நிதியை அந்த ஊழியர், 'ஆன்லைன்' வாயிலாக உடனுக்குடன் பரிமாற்றம் செய்தார். மீட்டிங் முடிந்து ஒரு வாரத்திற்கு பின், ஏதோ தவறு நடந்திருப்பதாக அந்த ஊழியருக்கு உறுத்தல் ஏற்பட்டது.
தோண்டித் துருவி விசாரித்த போது, அந்த வீடியோ அழைப்பே போலியானது என்பது தெரிய வந்தது. மீட்டிங்கில் வந்த தலைமை நிதி அதிகாரி உட்பட அனைவருமே, அவரது நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல என்ற தகவலை கேட்டு அதிர்ந்து போனார்.
ஏமாற்றம்
இணையத்தில் கிடைக்கும் இவர்களது அலுவலக ஆன்லைன் மீட்டிங் வீடியோக்களை வைத்து, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வாயிலாக டீப் பேக் செய்யப்பட்ட போலியான வீடியோவால், தான் ஏமாற்றப்பட்டது அவருக்கு தெரிய வந்தது. இந்த மோசடி தொடர்பாக ஹாங்காங் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏமாற்றப்பட்ட நிறுவனம் குறித்த தகவல் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.
