PUBLISHED ON : பிப் 06, 2026 03:36 AM

அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ.,வும், தி.மு.க., உறுப்பினருமான மனோஜ் பாண்டியன்: முதல்வராக இருந்தபோது, துாத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை தொலைக்காட்சியில் பார்த்து தெரிந்து கொண்டதாக கூறிய அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, தற்போது சட்டம்- - ஒழுங்கு சரியில்லை என கூறுகிறார். கோடநாடு கொலை - கொள்ளை வழக்கு என்றைக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டாலும், பழனிசாமியால் எதிர்க்கட்சி தலைவராகக்கூட வர முடியாது.
டவுட் தனபாலு: 'கோடநாடு கொலை - கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவங்களுக்கு, கண்டிப்பா தண்டனை வாங்கி தருவேன்'னு உங்களது புதிய தலைவர் ஸ்டாலின், 2021 சட்டசபை தேர்தல் பிரசாரத்திலேயே முழங்கினார்... அடுத்த தேர்தலே வந்தும், அந்த வாக்குறுதியை நிறைவேற்றாம இருப்பது ஏன் என்ற, 'டவுட்' உங்களுக்கு வரலையா?
தமிழக முதல்வர் ஸ்டாலின்: தேர்தல் நெருங்குவதால், நிறைய பேர் கருத்து கணிப்புகளை எடுக்கின்றனர். அந்த கணிப்புகள், தி.மு.க.,வுக்கு சாதகமாக உள்ளன. மக்கள் எங்கள் பக்கம் இருப்பதால், யாரை பற்றியும் நாங்கள் கவலைப்படுவது இல்லை. அரசியலில் எங்களுக்கு யாரும் எதிரிகள் அல்ல. எங்களை விமர்சிப்பவர்களைக்கூட, நாங்கள் நண்பர்களாகவே பார்க்கிறோம்; நேசிக்கிறோம்.
டவுட் தனபாலு: அது சரி... தேர்தல் முடிவில், யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காம, ஒருவேளை தொங்கு சட்டசபை அமைந்துவிட்டால், இன்று எதிரிகளா கருதி திட்டியவர்களின் தயவும் தேவைப்படும் என்பதால், 'எல்லாரும் நண்பர்கள் தான்'னு இப்பவே சொல்லி வைக்கிறீங்களோ என்ற, 'டவுட்'தான் வருது!
மா.கம்யூ., கட்சி மாநில செயலர் சண்முகம்: தமிழக அரசு நடத்திய அனைத்து கட்சி கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட, அங்கீகரிக்கப்படாத, பதிவு செய்யப்பட்ட, பதிவு செய்யப்படாதவை என, 64 கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். அன்னைக்கு தான் இத்தனை கட்சிகள் உள்ளன என்பதை தெரிந்து கொண்டேன். இந்த, 64 கட்சிகளில் கம்யூனிஸ்ட்களை தவிர, வேறு எந்த கட்சியும் மக்களிடம் நிதி பெற்று, தங்கள் அரசியல் நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை.
டவுட் தனபாலு: தி.மு.க., - அ.தி.மு.க., போன்ற ஆளும், ஆண்ட கட்சிகளுக்கு தேர்தல் நிதி தரவே நிறைய பேர் யோசிக்கிறாங்க... இதுல, உங்க கட்சிக்கு மக்கள் நிதி தர்றாங்கன்னு சொல்றதை எப்படி நம்புறது... அப்படி மக்களிடம் நிதி வாங்குற நீங்க, பிறகு ஏன் தி.மு.க., தலைமையிடம் தேர்தல் செலவுக்காக கோடி, கோடியாக வாங்குறீங்க என்ற, 'டவுட்'டும் வருதே!

