PUBLISHED ON : ஏப் 22, 2024 12:00 AM

அறிவியல் ஆயிரம்
தொட்டால் சுருங்கும் தாவரம்
தொட்டாற்சிணுங்கி இலையிலுள்ள செல்கள் சில திரவப் பொருட்களை கொண்டிருக்கும். இத்திரவத்தின் அழுத்தம் காரணமாக அதன் இலை நிமிர்ந்து நிற்கிறது. இதன் இலையைத் தொடும்போது அதன் தண்டுப் பகுதி ஒரு வகை அமிலத்தைச் சுரக்கிறது. அதனால் இலையின் கீழ்ப்பகுதி செல்லில் உள்ள திரவத் தன்மை நீங்கிவிடுகிறது. மேல்பகுதியில் திரவம் நீங்குவது இல்லை. எனவே மேற்பகுதி இலையின் எடை காரணமாக, முழு இலையும் நெகிழ்ந்து வளைந்து கீழே தொங்கி விடுகிறது. இதுதான் தொட்டாற்சிணுங்கி இலை சுருங்குவதற்கு காரணம்.
தகவல் சுரங்கம்
உலக பூமி தினம்
மனிதர்கள் வாழும் ஒரே கோள் பூமி. இதை பாதுகாப்பது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த ஏப்., 22ல் உலக பூமி தினம் கடைபிடிக்கப்படுகிறது. 'கோள் எதிர் பிளாஸ்டிக்'என்பது இந்தாண்டு மையக்கருத்து. இதன்படி உலகில் 2040க்குள் அனைத்து வித பிளாஸ்டிக் உற்பத்தியை 60 சதவீதம் குறைக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. பிளாஸ்டிக் நுண்துகள்கள் நிலம், நீர், ஆகாயம் என உலகம் முழுவதும் பரவி விட்டது. இயற்கை வளம், சுற்றுச்சூழலை பாதிக்கும் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க அனைவரும் முயற்சிக்க வேண்டும். 1970 ஏப்., 22ல் பூமி தினம் தொடங்கப்பட்டது.

