PUBLISHED ON : ஆக 30, 2025 12:00 AM

'தேர்தல் நெருங்கும் நேரத்தில் எல்லாரும் சேர்ந்து, நம் ஆட்சிக்கு குழி பறிக்கின்றனரே...' என, கவலையில் ஆழ்ந்துள்ளார், கேரள முதல்வரும், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவருமான பினராயி விஜயன்.
கேரளாவின் பெரிய நகரங்களில் ஒன்றான கொச்சியில், உள் ளாட்சி நிர்வாகம் மார்க் சிஸ்ட் கம்யூ., வசம் உள்ளது. அந்த கட்சியின் அனில் குமார், இங்கு மேயராக உள்ளார்.
இங்குள்ள முக்கிய சாலைகள் குண்டும், குழியுமாக இருப்பதால், அடிக்கடி விபத்து ஏற்படுவதாக எதிர்க்கட்சியான காங்கிரசைச் சேர்ந்தவர்கள் சமீபத்தில் போராட்டத்தில் இறங்கினர்.
கோவில் களில் நேர்த்தி கடனுக்காக அங்கபிரதட்சணம் செய்வது போல், சேதமடைந்த சாலைகளில் உருண்டு புரண்டனர். இந்த வித்தியாசமான போராட்டம், கேரள மக்களிடையே வரவேற்பை பெற்றது.
இதையடுத்து, கேரளாவில் எங்கெல்லாம், ஆளுங்கட்சி வசம் உள்ளாட்சி அமைப்புகள் உள்ளனவோ, அங்கெல்லாம் இதுபோன்ற நுாதன போராட்டங்களை நடத்த காங்கிரசார் முடிவு செய்துள்ளனர்.
இதைக் கேள்விப்பட்ட முதல்வர் பினராயி விஜயன், 'இன்னும் ஆறு மாதங்களில், சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இந்த சமயத்தில் எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்தினால், அது, மக்களின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும். நாம் பிரசாரத்துக்கு செல்லும் போது மக்களின் கடும் எதிர்ப்புகளை சந்திக்க வேண்டியிருக்குமே...' என, புலம்புகிறார்.