PUBLISHED ON : பிப் 12, 2024 12:00 AM

'போகிற போக்கை பார்த்தால், 'இண்டியா' கூட்டணி, லோக்சபா தேர்தல் வரை தாக்குப் பிடிக்குமா என்றே தெரியவில்லையே...' என ஆச்சரியத்திலும், குழப்பத்திலும் ஆழ்ந்துள்ளார், உ.பி., முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ்.
சில மாதங்களுக்கு முன் ஆரவாரமாக ஆரம்பிக்கப்பட்ட எதிர் கட்சிகளின் இண்டியா கூட்டணி, இப்போது, கட்டெறும்பாக மாறி வருகிறது.
இந்த கூட்டணியிலிருந்த முக்கிய கட்சிகள் ஒவ்வொன்றாக கழன்று வருகின்றன. பீஹார் முதல்வர் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், முதல் ஆளாக வெளியேறியது.
மம்தாவின் திரிணமுல் காங்கிரஸ், அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி ஆகியவையும் பெயரளவுக்குத் தான் கூட்டணியில் உள்ளன.
'கூட்டணியில் அங்கம் வகிக்கிறோம். ஆனால், தேர்தலில் கூட்டணி இல்லை...' என, புதுவிதமான விளக்கத்தை கொடுத்து, தலை சுற்ற வைக்கின்றனர், இவர்கள் இருவரும்.
இந்த நிலையில் தான், உத்தர பிரதேசத்தில் செல்வாக்கான, ராஷ்ட்ரீய லோக்தளம் கட்சியும் நடையை கட்டியுள்ளது. இத்தனைக்கும் அந்த கட்சிக்கு லோக்சபா தேர்தலில் இண்டியா கூட்டணி சார்பில், ஏழு தொகுதிகளை ஒதுக்குவதாக வாக்குறுதி அளித்திருந்தார், அகிலேஷ் யாதவ்.
ஆனால், கடைசி நேரத்தில் அவரது கண்ணில் மண்ணை துாவி விட்டு, பா.ஜ., கூட்டணியை நோக்கி திரும்பி விட்டார், ராஷ்ட்ரீய லோக்தளம் தலைவர் ஜெயந்த் சிங் சவுத்ரி.
அகிலேஷ் யாதவோ, 'ஆளில்லாத கடையில் யாருக்கு டீ ஆற்றுவது...' என, குழப்பத்தில் உள்ளார்.

