PUBLISHED ON : செப் 04, 2025 12:00 AM

'வருங்கால முதல்வர் என, தன்னைத் தானே கூறிக் கொள்ளும் இவர், இப்படி நடந்து கொள்ளலாமா...' என, ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் பற்றி எரிச்சலுடன் கேட்கின்றனர், பீஹாரில் உள்ள சக அரசியல்வாதிகள்.
பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. விரைவில் இங்கு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது.
இதில், ஆளும் கூட்டணிக்கு எதிராக, காங்கிரஸ் - ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. 'இந்த கூட்டணி வெற்றி பெற்றால், தேஜஸ்வி யாதவ் தான் முதல்வராக பதவியேற்பார்' என, அவரது ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். தேஜஸ்வி யாதவ், பீஹார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் மகன்.
சமீபகாலமாக பீஹாரில், தேர்தல் கமிஷன் மற்றும் பா.ஜ.,வுக்கு எதிராக தொடர் பேரணிகளை நடத்தி வருகிறார், தேஜஸ்வி யாதவ். 'எங்கள் தலைவருக்கு, 35 வயது தான் ஆகிறது. அவருக்கு எவ்வளவு கூட்டம் கூடுகிறது பார்த்தீர்களா...' என, அவரது ஆதரவாளர்கள் பெருமை பேசுகின்றனர்.
இந்நிலையில், சமீபத்தில் நள்ளிரவில் பாட்னாவின் பிரதான சாலையில், தன் நண்பர்கள் சிலருடன் சேர்ந்து, தேஜஸ்வி யாதவ் நடனமாடிய, 'வீடியோ' வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதை பார்த்த பா.ஜ., மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியினர், 'முதல்வர் பதவிக்கு ஆசைப்படும் தேஜஸ்விக்கு, இன்னும் பக்குவம் வரவில்லையே...' என, கிண்டல் அடித்தனர்.