PUBLISHED ON : ஜூன் 23, 2026 12:00 AM

'இது என்ன புது தலைவலியாக இருக்கிறது...' என கவலைப்படுகிறார், திரிணமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, இந்திய தேசியவாத குடிமக்கள் கட்சியில் ஐக்கியமாகி உள்ள, மேற்கு வங்கத்தின் மூத்த அரசியல்வாதியான சுதீப் பந்தோபாத்யாய்.
மேற்கு வங்கத்தில், முதல்வர் சுவேந்து அதிகாரி தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. கடந்த ஏப்ரலில் இங்கு நடந்த சட்டசபை தேர்தலில், மம்தா பானர்ஜியின் திரிணமுல் காங்கிரஸ் தோல்வி அடைந்தது.
இதைத் தொடர்ந்து, திரிணமுல் காங்கிரசின் லோக்சபா எம்.பி.,க்களில் 20 பேர், அந்த கட்சியில் இருந்து வெளியேறி, இந்திய தேசியவாத குடிமக்கள் கட்சி என்ற, முன் பின் அறிமுகமில்லாத ஒரு கட்சியில் அடைக்கலமாகி விட்டனர்.
இந்த 20 பேரில், திரிணமுல் காங்கிரசின் மூத்த தலைவராகவும், மம்தா பானர்ஜியின் தீவிர விசுவாசியாக இருந்தவருமான சுதீப் பந்தோபாத்யாயும் ஒருவர். இவர், மம்தா தயவில் மத்திய அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.
சுதீப்பின் இந்த முடிவுக்கு, அவரது குடும்பத்துக்குள் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. குறிப்பாக, அவரது மனைவி, 'பதவிக்காக கொள்கையை துறக்கலாமா; தேர்தல் தோல்விக்காக கொள்கையை மாற்றுவது பச்சோந்தித்தனம் இல்லையா...?' என ஆவேசமாக கேட்டுள்ளார். இதனால், சுதீப் பந்தோபாத்யாய் தர்மசங்கடத்தில் தவிக்கிறார்.
