PUBLISHED ON : பிப் 01, 2026 03:37 AM

'இன்னும் இரண்டு ஆண்டுகள் ஆட்சி காலம் இருக்கிறது; அப்படியிருந்தும், எப்படி இவ்வளவு தைரியமாக செயல்படுகின்றனர்...' என, கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியினரை பார்த்து ஆச்சரியப்படுகின்றனர், மற்ற கட்சியினர்.
கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. மஹாத்மா காந்தி கிராமப்புற வேலை வாய்ப்பு திட்டத்தை, 'விபி ஜி ராம் ஜி' என, மத்திய அரசு பெயர் மாற்றம் செய்துள்ளது. இதை கண்டித்து, கர்நாடக காங்கிரஸ் சார்பில், சமீபத்தில் பெங்களூரில் போராட்டம் நடத்தப்பட்டது.
பா.ஜ.,வின் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில், மத்திய அரசு அல்லது கவர்னருக்கு எதிராக நடக்கும் போராட்டங்களில், முதல்வர்கள், அமைச்சர்கள் பங்கேற்பதை பெரும்பாலும் தவிர்த்து விடுவர்; கட்சி நிர்வாகிகள் மட்டுமே பங்கேற்பர்.
ஆனால், பெங்களூரு போராட்டத்தில் முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் மற்றும் அமைச்சர்கள் அனைவரும் பங்கேற்றனர். மத்திய அரசுக்கு எதிராக முழக்கம் எழுப்பிய அவர்கள், நேராக கவர்னர் மாளிகைக்கு சென்று, மத்திய அரசை கண்டித்து, கவர்னர் தாவர்சந்த் கெலாட்டிடமே மனுவும் அளித்தனர்.
இதை பார்த்த மற்ற கட்சியினர், 'மத்திய அரசை கண்டித்து, கவர்னரிடமே மனு அளிக்கின்றனரே; சித்தராமையாவும், சிவகுமாரும் பதவிகளை துறக்க தயாராகி விட்டனரா...?' என கேட்கின்றனர்.

