PUBLISHED ON : ஏப் 17, 2026 12:00 AM

'முக்கிய பதவியில் இருப்பவர், கொஞ்சம் பொறுப்பாக செயல்படக் கூடாதா...' என, காங்கிரஸ் பொதுச்செயலர் கே.சி.வேணுகோபால் பற்றி வருத்தப்படுகின்றனர், ஒடிஷா மாநிலத்தைச் சேர்ந்த காங்., நிர்வாகிகள்.
ஒடிஷாவில், முதல்வர் மோகன் சரண் மஜி தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இந்த மாநிலம், 25 ஆண்டுகளுக்கு முன், காங்கிரசின் கோட்டையாக இருந்தது. கடைசியாக, 2000ல், காங்கிரசைச் சேர்ந்த, ஹேமானந்த பிஸ்வால் என்பவர் ஒடிஷா முதல்வராக பதவி வகித்தார்.
அதன்பின் நடந்த எந்த தேர்தலிலும், அங்கு காங்கிரஸ் வெற்றி பெறவில்லை. இங்கு, அடுத்த சட்டசபை தேர்தல், 2029ல் நடக்கவுள்ளது. இதில், எப்படியாவது வெற்றி பெற்று, ஆட்சி அமைத்து விட வேண்டும் என, காங்கிரஸ் மேலிட தலைவர்கள் விரும்புகின்றனர்.
இதற்காக, கட்சியின் பொதுச்செயலர் கே.சி.வேணுகோபாலை, களத்தில் இறக்கி விட்டுள்ளனர். அவரும் முதல் கட்டமாக, ஒடிஷாவில் உள்ள காங்கிரஸ் நிர்வாகிகளை ஒட்டுமொத்தமாக மாற்றிவிட்டு, புதியவர்களை நியமித்துள்ளார்.
ஆனால், புதிய நிர்வாகிகளில் பலர், உயர் வகுப்பை சேர்ந்தவர்கள் என்றும், பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகங்களை சேர்ந்தவர்கள், விரல் விட்டு எண்ணக் கூடிய அளவிலேயே நிர்வாகிகளாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும், கட்சிக்குள் முணுமுணுப்பு எழுந்துள்ளது.
'நிர்வாகிகள் நியமனத்திலேயே இவ்வளவு ஏற்றத்தாழ்வுகள் இருந்தால், இந்த ஜென்மத்தில், ஒடிஷாவில் நம்மால் ஆட்சியை பிடிக்க முடியாது...' என்று புலம்புகின்றனர், காங்கிரஸ் நிர்வாகிகள்.
