PUBLISHED ON : ஏப் 20, 2026 01:40 AM

'நாங்கள் எல்லாம் இத்தனை வருடங்களாக மம்தாவை, இரும்பு பெண்மணி என, வெளி உலகத்துக்கு சித்தரித்து வைத்திருந்தோம். கடைசியில் இப்படி செய்து விட்டாரே...' என, மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜியை பற்றி கவலையுடன் பேசுகின்றனர், அக்கட்சி நிர்வாகிகள்.
மேற்கு வங்கத்தில், வரும் 23, மற்றும், 29ம் தேதிகளில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இதில், வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்க, மம்தா தீவிரமாக பிரசாரம் செய்து வருகிறார்.
சமீபத்தில், அந்த மாநிலத்தின், ஜல்பைகுரி என்ற இடத்தில், திரிணமுல் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக, நடைபயணமாக சென்று, மம்தா பிரசாரம் செய்தார். அப்போது பாதுகாவலர்களை மீறி, ஒரு இளைஞர், மம்தாவின் அருகே ஓடி வந்தார். மம்தாவின் காலில் விழுந்து ஆசி வாங்குவதற்காக வந்த அவரை, பாதுகாவலர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
மம்தாவோ, அந்த இளைஞர், தன்னை தாக்க வந்ததாக நினைத்து பீதியடைந்தார். அதிர்ச்சியில் உறைந்த மம்தா, இயல்பு நிலைக்கு திரும்ப நீண்ட நேரமானது. சில நிமிடங்களுக்குப் பின், நடைபயணத்தை தொடர்ந்தார். ஆனாலும், பயத்தில் இருப்பது, அவரது முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது.
இதை கேள்விப்பட்ட, பா.ஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சியினரும், 'மம்தாவை, இரும்பு பெண்மணி என்றும், வீர மங்கை என்றும், திரிணமுல் காங்கிரஸ் கட்சியினர் பெருமையடித்து வந்தனர்... ஆனால் அவர், இவ்வளவு பயந்த சுபாவம் உள்ளவர் என, இப்போது அம்பலமாகி விட்டது...' என, கிண்டலடிக்கின்றனர்.
