PUBLISHED ON : ஏப் 15, 2026 01:44 AM

'எதிர்க்கட்சியாக இருக்கும்போது தான், இது போன்ற விஷயங்கள் இவரது கண்ணுக்கு தெரியும் போலிருக்கிறது...' என, ஆந்திர முன்னாள் முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டி பற்றி எரிச்சலுடன் கூறுகின்றனர், அங்குள்ள பொதுமக்கள் .
ஆந்திராவில், முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சியின் ஆட்சி நடக்கிறது. ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலம், 2014ல் இரண்டாக பிரிக்கப்பட்டதால், ஹைதராபாத், தெலுங்கானாவின் தலைநகரமாகி விட்டது.
அப்போது, முதல்வராக இருந்த சந்திரபாபு நாயுடு, அமராவதியை ஆந்திராவின் தலைநகரமாக மாற்ற, பல கோடி ரூபாயை செலவு செய்தார். அதற்குள் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, ஜெகன்மோகன் ரெட்டி முதல்வரானதும், அமராவதி திட்டத்தை கிடப்பில் போட்டார்.
தற்போது மீண்டும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, சந்திரபாபு நாயுடு முதல்வராகி உள்ளார். அமராவதி திட்டத்தை துாசு தட்டி, மீண்டும் செயல் படுத்த முயற்சித்து வருகிறார்.
ஆனால், தற்போது எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் ஜெகன்மோகன் ரெட்டியோ, 'அமராவதியை தலைநகராக்கும் திட்டத்தை செயல்படுத்த விட மாட்டேன். ஆந்திராவுக்கு மசூலிபட்டினம், விஜயவாடா, குண்டூர் ஆகிய மூன்று தலைநகரங்கள் வேண்டும்; இல்லையெனில் போராட்டம் நடத்துவேன்...' என ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
ஆந்திர மக்களோ, 'ஜெகன்மோகன் ரெட்டி போன்றவர்கள், தானும் உருப்பட மாட்டார்கள்; அடுத்தவரையும் உருப்பட விட மாட்டார்கள்...' என புலம்புகின்றனர்.

