20வது திருமணநாளில் மீண்டும் திருமணம் செய்த சூர்யா, ஜோதிகா : உறுதிமொழி அளித்து ஜோதிகா நெகிழ்ச்சி பதிவு
நட்சத்திர தம்பதியரான சூர்யா - ஜோதிகா தங்களது 20வது திருமணநாளை வெகு விமரிசையாக கொண்டாடினார். அதுவும் சர்ச் ஒன்றில் கிறிஸ்துவ முறைப்படி தங்களது திருமணத்தை ரீ-கிரியேட் செய்து கொண்டாடினர். சூர்யா வெள்ளை நிற கோட், ஜோதிகா வெள்ளை நிற கவுனிலும் மணமக்களாக வந்தனர். இவர்களை மகள் தியா மற்றும் மகன் தேவ் ஆகியோர் அழைத்து வந்தனர். பின்னர் இருவரும் கிறிஸ்துவ முறைப்படி மோதிரம் மாற்றி மீண்டும் திருமணம் செய்து கொண்டனர். இந்த வீடியோவை ஜோதிகா தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு நெகிழ்ச்சி கலந்த நீண்ட பதிவு ஒன்றை போட்டுள்ளார்.
அதில், ‛‛எங்களது 20 ஆண்டுகால 'காதல் மற்றும் சண்டைகள்' நிறைந்த பயணத்தை கொண்டாடும் விதமாக மீண்டும் ஒருமுறை எடுத்துக் கொண்ட உறுதிமொழி. இது திருமண வாழ்க்கையை கொண்டாடும் நிகழ்வு அல்ல. குறைகள், விட்டுக் கொடுத்தல், புரிதல் மற்றும் சுயநலமற்ற அன்பை கொண்டாடும் நிகழ்வு. ஒருவருக்காக ஒருவர் நாங்கள் எப்படி மாறியிருக்கும் விதத்தைக் கொண்டாடும் தருணம்.
ஒரு காலத்தில் எட்டா கனவாக தோன்றிய ஒன்று இன்று என் வாழ்நாளில் நிஜமாகி உள்ளது. இப்போது சில விஷயங்களை நான் உறுதியளிக்கிறேன்.
வாழ்க்கையை கொண்டாட உறுதியளிக்கிறேன்
ஏனென்றால் தன்னைவிட அதிகமாக நம்மை மதிக்கும் ஒரு மனிதருடன் வாழும்போது, வாழ்க்கையே ஒரு பெரும் பரிசாக அமைகிறது.
ஒருபோதும் குறை கூற மாட்டேன் என்று உறுதியளிக்கிறேன்
நன்றியுணர்வுடன் இருக்க உறுதியளிக்கிறேன்
என்னை அரவணைத்து பாதுகாக்கும் மனிதர். என் வாழ்க்கைக்கு அர்த்தத்தையும் வாழ்வதற்கான காரணத்தையும் தந்த என் அழகான குழந்தைகளுக்காகவும் நன்றி கூறுகிறேன்.
ஆரோக்கியமாக இருக்க உறுதியளிக்கிறேன்
இதுதான் நாம் சேர்த்து வைக்கும் உண்மையான சொத்து.
சிறந்த தாயாக இருக்க உறுதியளிக்கிறேன்
சமைப்பதாலோ, வீட்டைச் சுத்தம் செய்வதாலோ அல்லது உதவிகள் செய்வதாலோ மட்டுமல்ல, மாறாக, என் புன்னகையின் மூலமும் என் குழந்தைகள், தங்கள் அப்பாவும் அம்மாவும் வாழ்ந்த அந்த வாழ்க்கைக் கதையைத் தாங்களும் மீண்டும் வாழ விரும்பும் வகையிலான ஒரு புன்னகையை நான் கொண்டிருப்பேன்.
என் சூர்யாவிற்கு உறுதியளிக்கிறேன்
நான் எப்போதும் அந்த 'முழுமையற்ற' மனைவியாகவே இருப்பேன், சண்டையிடுவேன், பிறகு சமாதானமாவேன். ஒவ்வொரு முறையும் உன்னுடன் இன்னும் கொஞ்சம் நெருக்கமாவேன்.
நம் நட்பைப் போற்ற உறுதியளிக்கிறேன்
கணவனாகவும் குழந்தைகளின் தந்தையாகவும் இருக்கும் ஒரு சிறப்புமிக்க மனிதருக்குள், ஒரு சமமான துணையாக, நம்பிக்கைக்குரியவராக, அரட்டை அடிக்கும் தோழராக மற்றும் சிறந்த நண்பராக ஒருவரைக் காண்பது அரிதான ஒன்று. எனவே, அடுத்த இருபது ஆண்டுகளை நோக்கி... புரிதலுடன் நாம் நாமாகவே பயணிப்போம்.