நடிகை தர்ஷா குப்தா உள்ளிட்ட 12 பேர் மீது வழக்கு
கவர்ச்சி நடிகை தர்ஷா குப்தா, சின்னத்திரை தொடர்களில் அறிமுகமான இவர் பின்னர் 'பிக் பாஸ்' நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். சில திரைப்படங்களிலும் நடித்தார். சமூக வலைத்தளங்களில் பிசியாக இருக்கும் தர்ஷா அதில் கவர்ச்சி வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். 2 மில்லியன் பேர் அவரை பின் தொடர்கிறார்கள்.
இந்த நிலையில் சேலத்தை சேர்ந்த வழக்கறிஞர் அஜித் என்பவர் தர்ஷா உள்ளிட்ட 12 பேர் மீது சேலம் சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்துள்ளார். அவர் கொடுத்துள்ள புகாரில் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் மற்றும் பல சமூக வலைதளங்களில் 18 வயதிற்கும் கீழ் உள்ள இளம் வயதுடையவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் வெளியீடுகளை அவர்களின் சமூக வலைதள பக்கங்களில் வெளியிடுகின்றனர்.
இவர்களில் திருச்சி சாதனா, நடிகை தர்ஷா குப்தா, சூரிய பிரபா, ஹனி சென்னை, அபிநயா சித்ரா, பிரியங்கா ராஜ், சரண்யா, சந்தோஷ், யூடியூப்பில் ஐஸ்வர்யா சிவா, திவி திலகவதி, தீபா கரூர், சிந்தசேகர் ஆகியோர் லைவில் வந்து சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுமாறு கூறுகின்றனர். அதன் பிறகு ஆபாசமாகவும், அருவருக்கத்தக்க வகையிலும், எல்லாவற்றையும் காட்டுவேன் என கூறுகின்றனர். இவ்வாறு பணத்தை பெற்று மோசடி செய்கின்றனர்.
இதன்மூலம் மாதம்தோறும் பல லட்சங்களை சம்பாதிக்கின்றனர். இவர்களின் நடவடிக்கை இளைஞர்களை சீரழிக்கிறது. எனவே, இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதுடன், அவர்களின் இன்ஸ்டாகிராம் கணக்கை தடை செய்ய வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.
இந்த புகார் மனுவை பெற்ற சைபர் கிரைம் போலீசார் தர்ஷா குப்தா உள்ளிட்ட 12 பேர் மீது 4 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.