“எங்களுக்கும் முக்கியமான வேலைகள் உண்டு” : தாமதமாக வந்த அமைச்சரை மேடையிலேயே விமர்சித்த இயக்குனர்
சமீபத்தில் கேரளாவில் பிலிம் சொசைட்டி அசோசியேஷன் சார்பில் நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்வில் பிரபல எழுத்தாளரும் இயக்குனருமான அடூர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட பல திரை பிரபலங்களும் கலந்து கொண்டனர். திருவனந்தபுரத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருந்த அமைச்சர் பி.சி.விஸ்வநாத் வர தாமதமானதால், நிகழ்ச்சி தொடங்குவதில் இரண்டு மணி நேரம் காலதாமதம் ஏற்பட்டது. இது குறித்து அங்கு சலசலப்பு எழுந்தது.
அமைச்சர் வந்த பிறகு நிகழ்ச்சி தொடங்கியதும் அதில் பேசிய இயக்குனர் அடூர் கோபாலகிருஷ்ணன், அமைச்சர்களுக்கு எப்படி முக்கியமான வேலைகள் இருக்கிறதோ, அதேபோல மற்றவர்களுக்கும் பொறுப்புகளும் வேலைகளும் உள்ளன என்று அவரது கால தாமதத்தைக் குறித்து தனது அதிருப்தியைப் மேடையிலேயே வெளிப்படுத்தினார். இப்படி திரைப்பட இயக்குனர், அமைச்சரின் தாமதத்தை வெளிப்படையாகவே அவர் முன்பாக விமர்சித்தது மலையாளத் திரை உலகிலும் அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.