மக்களை சிரிக்க வைக்கும் பணி கடினமானது : அக்ஷய் குமார்
பூத் பங்களா படத்தின் வெற்றிக்கு பிறகு ஹிந்தியில் அக் ஷய் குமார் நடிப்பில் வெளியாக உள்ள படம் ‛வெல்கம் டு தி ஜங்கிள்'. இந்தபடம் முழுக்க முழுக்க நகைச்சுவையை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் இடையே பெரிதும் எதிர்பார்க்கப்படும் இப்படம் நாளை ஜூன் 26ல் ரிலீஸாகிறது.
சமீபத்தில், இப்படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் படம் பற்றியும், பல்வேறு விஷயங்கள் குறித்தும் மனம் திறந்து பேசினார் அக் ஷய் குமார். அவர் கூறியதாவது...
'வெல்கம் டு தி ஜங்கிள்' படத்தில் உங்களை உற்சாகப்படுத்திய விஷயம் எது?
இதில் உள்ள கட்டுப்பாடற்ற நகைச்சுவை கலாட்டா தான் என்னை மிகவும் உற்சாகப்படுத்தியது. இதில் மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே உள்ளனர். ஒவ்வொரு நடிகரும் படத்திற்கு ஒரு தனித்துவமான சுவையை கொண்டு வந்துள்ளனர். நகைச்சுவை என்பது நான் உண்மையாகவே ரசிக்கும் ஒரு வகை . 'வெல்கம் டு தி ஜங்கிள்' அந்தப் பொழுதுபோக்கு அம்சத்தை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்கிறது. இதில் வேடிக்கை, ஆச்சரியங்கள், அதிரடி மற்றும் சிரிப்பு நிறைந்ததாக இருக்கும்.
நகைச்சுவை படங்கள் எப்போதும் உங்களுக்கு பலமாக இருந்துள்ளது அதுபற்றி?
மக்களைச் சிரிக்க வைப்பது மிகவும் கடினமான பணிகளில் ஒன்று. திரையில் நீங்கள் செய்யும் ஒரு விஷயத்தால் ரசிகர்கள் தங்கள் கவலைகளை மறந்து சிரிக்கும்போது, அது மிகுந்த மனநிறைவைத் தரும் உணர்வாக இருக்கிறது. நகைச்சுவை என் திரைப்பயணத்தில் மறக்க முடியாத பல தருணங்களை எனக்கு வழங்கியுள்ளது.
போஜ்புரி நடிகர்களும் பாடல்களும் பெரிதாகக் கண்டுகொள்ளப்படாமல் இருந்த சூழலில் இன்று அவர்களும், பாடல்களும் மெயின் சினிமாவில் சேர்க்கப்படுகின்றன. அதுபற்றி உங்கள் கருத்து?
அது உண்மை இல்லை என்று நான் நினைக்கவில்லை. எல்லோருக்காகவும் என்னால் பேச முடியாது, ஆனால் தனிப்பட்ட முறையில், நான் எப்போதும் போஜ்புரி நடிகர்களையும் பாடல்களையும் பாராட்டி வந்துள்ளேன். அதனால்தான் எங்கள் படத்தில் 'கிஸ் கிஸ்' என்ற பாடலை சேர்த்தோம். அந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும். அந்தப் பாடலின் படப்பிடிப்பு எனக்கு இன்னும் நினைவிருக்கிறது; அது ஒரே நாளில் முடிக்கப்பட்டது. அன்று உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோதிலும், அந்த முழு அனுபவத்தையும் நான் மிகவும் ரசித்தேன். போஜ்புரி இசையின் ஆற்றல், தாளம் மற்றும் வசீகரம் ஆகியவை உண்மையிலேயே சிறப்பானவை. அது பரந்த அளவிலான ரசிகர்களைச் சென்றடைவதையும், அதற்குரிய அங்கீகாரத்தைப் பெறுவதையும் பார்ப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.
நீங்கள் ஒரு 'பிராங்க்ஸ்டர்', இந்த படப்பிடிப்புத் தளத்தில் நீங்கள் என்ன குறும்புத்தனத்தையும் செய்தீர்கள்?
படப்பிடிப்புத் தளத்தில் நாங்கள் மிகவும் உற்சாகமாக இருந்தோம். மொத்தம் 28 நடிகர்கள் ஒன்றாகப் பணியாற்றியதால், அங்கு ஒவ்வொரு நாளும் எப்படிப்பட்ட சூழல் இருந்திருக்கும் என்பதை நீங்கள் கற்பனை செய்து பார்க்கலாம். மிகுந்த உற்சாகம் நிறைந்ததாக இருந்தது; ஒரு கணம் கூட சலிப்பு ஏற்படவில்லை. என்னை விட சுனில் ஷெட்டி தான் பெரிய குறும்புக்காரர். ஒரே வித்தியாசம் அவர் எப்போதும் முகத்தை சீரியஸாக வைத்துக் கொள்வார். அதனால் அவர் செய்யும் குறும்புத்தனங்கள் வெளியில் தெரிவதில்லை. பல ஆண்டுகளாக சுனிலும் நானும் இணைந்து பல படங்களில் பணியாற்றியுள்ளோம், அதனால் படப்பிடிப்புத் தளத்தில் மற்றவர்களைக் கலாய்ப்பதையும் வேடிக்கை பார்ப்பதையும் அவர் எவ்வளவு ரசிப்பார் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். உண்மை என்னவென்றால், அவர் இதில் ஒரு கில்லாடி.