பிளாஷ்பேக் : ரஜினியை ஹீரோவாகிய இயக்குனரை பற்றி தெரியுமா?
வில்லனாக நடித்துக் கொண்டிருந்த ரஜினிகாந்தை ஹீரோவாக்கிய படம் 'பைரவி' என்பதும், அதனை தயாரித்தவர் கலைஞானம் என்பதும் அனைவரும் அறிந்த ஒன்றுதான். ஆனால் அந்தப் படத்தை இயக்கிய பாஸ்கரை பற்றி அவ்வளவாக யாருக்கும் தெரியாது. பாஸ்கர். எஸ் ஏ சந்திரசேகரை போன்று சட்டப் பிரச்னைகளைக் கதைக் கருவாகக் கொண்டு திரைப்படங்களை உருவாக்கியவர்.
இயக்குநர் ஸ்ரீதரின் உதவியாளராகத் திரையுலகில் நுழைந்தவர் எஸ்பி.முத்துராமன், பஞ்சு அருணாசலம், தூயவன் ஆகியோருடன் இணைந்து பணிபுரிந்திருக்கிறார். பாஸ்கர் இயக்கிய முதல் படம் ‛இன்னும் ஒரு மீரா'. அதன் பின்னர் அவர் இயக்கிய படம்தான் ‛பைரவி'. இந்தத் திரைப்பட வாய்ப்பு முதலிலேயே இவருக்குக் கிடைத்துவிடவில்லை. முதலில் இயக்குநர் பட்டாபிராமனுக்குக் கிடைத்த வாய்ப்பை அவர் மறுத்திருக்கிறார். ஆகவே, பாஸ்கருக்கு அந்த வாய்ப்புக் கிடைத்துள்ளது. பைரவி மட்டுமே இன்னொருவரின் கதை மற்ற படங்கள் அனைத்தும் பாஸ்கரின் சொந்தக் கதை.
ரஜினிக்கு வில்லனாக நடிப்பதற்காக முத்துராமனை அணுகியிருக்கிறார்கள். ஆனால், அவர் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை. ஆகவே, அதுவரை நாயக பாத்திரத்தில் நடித்துவந்த ஸ்ரீகாந்தை அணுகி வில்லனாக நடிக்கச் சம்மதம் பெற்றவர் பாஸ்கர்.
படம் பெரிய வெற்றி பெற்றது. அதை தயாரித்து கலைஞானம் மற்றும் விநியோகித்த எஸ் தானு ஆகியோரின் பெயர்கள்தான் பெரிய அளவில் பேசப்பட்டது; பாஸ்கரை பற்றி யாரும் பேசவில்லை. 1980ல் பாஸ்கர், ஆஸ்கார் மூவிஸ் என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை உருவாக்கினார். இந்த நிறுவனத்தின் மூலம் 'சூலம்', 'தீர்ப்புகள் திருத்தப்படலாம்' படங்களை இயக்கினார். இதில் தீர்ப்புகள் திருத்தப்படலாம் வெள்ளிவிழா கண்டது. இதன் பிறகு 'தண்டிக்கப்பட்ட நியாயங்கள்', 'பௌர்ணமி அலைகள்', 'பன்னீர் நதிகள்' சட்டத்தின் திறப்பு விழா ஆகிய படங்களை இயக்கினார். இதுவும் வெற்றிப் படங்களே.
மொத்தம் 11 படங்களை இயக்கியுள்ளார். ‛விஷ்ணு', ‛காதல் ரோஜாவே', ‛தோட்டா' ஆகிய படங்களைத் தயாரித்துள்ளார். தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு நான்கு முறை செயலாளராக இருந்துள்ளார். 2013 ஜூலை 12 அன்று மாரடைப்பால் இவர் மரணமடைந்தார்.