உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / துரந்தர் 2 : ஓயே ஓயே பாடலுக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு

துரந்தர் 2 : ஓயே ஓயே பாடலுக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு

கடந்த வருடம் டிசம்பர் மாதம் வெளியான துரந்தர் படம் பெரிய வெற்றியைப் பெற்றதைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகமான துரந்தர் 2 கடந்த மார்ச் இறுதியில் வெளியானது. அந்தப் படமும் முதல் பாகத்தை விட அதிக அளவில் வெற்றியைப் பெற்று மிகப்பெரிய வசூலையும் ஈட்டியது. அதே சமயம் அந்த படத்தில் ரீமிக்ஸ் செய்யப்பட்டு இடம்பெற்ற ஓயே ஓயே என்கிற பாடல் உரிமை தங்களிடம் இருப்பதாகவும் அதை அனுமதியின்றி ரீமிக்ஸ் செய்து துரந்தர் 2 படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறி திருமூர்த்தி பிலிம்ஸ் என்கின்ற நிறுவனம் பதிப்புரிமை மீறல் தொடர்பாக வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இப்படத்தின் ஓடிடி வெளியீட்டில் இப்பாடலை பயன்படுத்துவதற்குத் தடை விதிக்க மறுத்துவிட்டது. இது குறித்து இடப்பட்டுள்ள உத்தரவில், இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் டி-சீரிஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து பெரும் பணம் மற்றும் உழைப்பைச் செலவழித்து இந்த படத்தை உருவாக்கியது.

திருமூர்த்தி பிலிம்ஸ் நிறுவனம் மிகத் தாமதமாக நீதிமன்றத்தை அணுகியதால் இப்போது தியேட்டர் அல்லது ஓடிடி வெளியீட்டைத் தடுப்பது தயாரிப்பாளருக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளதுடன் பாடலை மட்டும் தடை செய்வது சாத்தியமில்லாத ஒன்று எனவும் குறிப்பிட்டுள்ளது. அதேசமயம் நியாயமான முறையில் இந்தச் சிக்கலை தீர்க்க டி-சீரிஸ் நிறுவனம் ரூபாய் 50 லட்சத்தை நீதிமன்றப் பதிவாளரிடம் நான்கு வாரங்களுக்குள் டெபாசிட் செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !