திருமண ஆசை காட்டி 9 கோடியை ஆட்டைய போட்ட நடிகை
வளர்ந்து வரும் இளம் தெலுங்கு நடிகை ஆஷு ரெட்டி, பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர், சில படங்களிலும் நடித்துள்ளார். இவர் லண்டனில் வசிக்கும் பொறியாளர் தர்மேந்திரா என்பவரை திருமணம் செய்து கொள்வதாக கூறி அவரிடம் 9 கோடியே 35 லட்சம் ரூபாயை ஏமாற்றி வாங்கி உள்ளார்.
இதுகுறித்து தர்மேந்திராவின் தந்தை சத்யநாராயண மூர்த்தி அளித்துள்ள போலீஸ் புகாரில் கூறப்பட்டிருப்பதாவது: எனது மகன் தர்மேந்திரா லண்டனில் மென்பொறியாளராக இருக்கிறார். அவருக்கு ஆஷு ரெட்டி, 2018ம் ஆண்டு பழக்கமானார். திருமண ஆசை காட்டிய அவர், தர்மேந்திராவிடம் இருந்து ஐந்து கிலோ தங்கம், சொகுசு கார்கள் மற்றும் ரூ.1.80 கோடி மதிப்புள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஆகியவற்றை எனது மகனிடம் ஏமாற்றி வாங்கி உள்ளார். இதன் மொத்த மதிப்பு ரூ.9.35 கோடி. ஆஷு ரெட்டியின் சகோதரியும் ரூ.50 லட்சம் பெற்றுள்ளார். இவற்றைப் பெற்றுக்கொண்டு திருமணம் செய்துகொள்ள மறுத்து விட்டார்.
இதைத் தொடர்ந்து, ஆஷு ரெட்டியிடம் பணத்தைத் திருப்பிக் கொடுக்குமாறும், திருமணத்தின் பெயரில் கொடுக்கப்பட்ட தங்கத்தைத் திருப்பித் தருமாறும் கேட்டபோது மறுத்துவிட்டார். அவரிடம் எனது மகன் இழந்த சொத்து மற்றும் தங்கத்தை மீட்டுத் தரவேண்டும் என்று அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஹைதராபாத் பொருளாதாரக் குற்றப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே இக்குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள ஆஷு ரெட்டி, தவறான தகவல்களைப் பரப்பினால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.