
மகாராஷ்டிர மாநிலம் ஜெஜூரியில் உள்ளது கண்டோபா சிவன் கோயில்.
கண்டோபா கந்தேராவ், கந்தேரே, மல்ஹாரி மார்டண்ட், மல்ஹர் எனப்படும் இவர் மகாராஷ்டிரா பழங்குடி இனத்தவரின் முக்கிய தெய்வம். சிவனின் அவதாரமாக கருதப்படும் கண்டோபா சிவனை 'மார்த்தாண்ட பைரவர்' என்றும் அழைக்கிறார்கள்.
இக்கோயிலின் கருவறை, வளாகம், படிகள் எங்கும் மஞ்சள் பொடி துாவப்பட்டுள்ளது.
அசுரர்களான மணி, மல்லா இருவரும் தவம் செய்தனர். இதனால் மகிழ்ந்த பிரம்மா சக்தி மிக்கவராக அவர்களை மாற்றினார். ஆணவத்தால் அவர்கள் மக்களை துன்புறுத்த ஆரம்பித்தனர். அசுரர்களின் கொட்டத்தை அடக்க கண்டோபா வடிவில் பூமிக்கு வந்தார் சிவன். போரில் ஒருவனைக் கொன்றதும், மற்றொருவன், 'மக்களுக்கு சேவை செய்வேன்' எனச் சரணடைந்தான். சிவனும் மன்னித்து அருள்புரிந்தார்.
கோட்டை போல கோயில் பரந்து விரிந்து காட்சியளிக்கிறது. இங்கு ஹிந்து, ஜைன சமயங்களின் அடையாளத்தை காணலாம். சிவன், முருகன், சூரியன் மூவரையும் கருவறையில் காணலாம். கண்டோபா சிவன் கையில் மஞ்சள் கிண்ணம் உள்ளது. வாகனமான நந்தி, இரண்டு யானைகள் கருவறையின் முன்பு உள்ளன. பெரிய முற்றம், துாண்கள், தாழ்வாரம், சிக்கலான சிற்பங்கள் என மராட்டிய பாணியில் கோயில் கட்டப்பட்டுள்ளது.
குன்பி இனத்தினர், தங்கர் பழங்குடியினர், மேய்ப்பர்கள், மகாராஷ்டிராவின் நாடோடி மக்கள் என பலருக்கும் கண்டோபா குலதெய்வமாக இருக்கிறார். இங்கு மஞ்சள் துாள் முக்கிய பிரசாதம். பக்தர்கள் மஞ்சள் பொடியை எறிவதால் கோயில் எங்கும் மஞ்சளாக உள்ளது. கண்டோபாவுக்கு தங்களின் பக்தியை வெளிப்படுத்த இப்படி செய்கின்றனர்.
எப்படி செல்வது : புனே ரயில்வே ஸ்டேஷனில் இருந்து 47 கி.மீ.,
விசேஷ நாள்: சம்பா சஷ்டி, சோமவதி அமாவாசை, பந்தாரா திருவிழா.
நேரம்: காலை 6:30 - 12:00 மணி; மதியம் 1:00 - 8:30 மணி
தொடர்புக்கு: 98810 43282
அருகிலுள்ள கோயில்: ஸ்ரீமந்த் தக்துஷேத் ஹல்வாய் கணபதி மந்திர் 48 கி.மீ. (தடை விலக...)
நேரம்: அதிகாலை 5:30 - இரவு 11:00 மணி
தொடர்புக்கு: 020 - 2449 2000

