
பொதிகை மலைக்கு வந்த அகத்தியர் கைலாயத்திலுள்ள சிவகிரி, சக்திகிரி என்னும் இரு சிகரங்களை வழிபாட்டுக்காக கொண்டு வர விரும்பினார்.
சீடரான இடும்பாசுரனிடம் இப்பணியை ஒப்படைத்தார். இடும்பனும், தன் மனைவி இடும்பியுடன் சென்று, சிகரங்களை காவடியாக தோளில் சுமந்து வந்தான். அதை தன் இருப்பிடமாக்க விரும்பிய முருகன் ஒரு திருவிளையாடலை நிகழ்த்தினார். இடும்பன் பழநியை வந்தடைந்ததும், அந்த மலைகளை கீழே வைத்து விட்டு இளைப்பாறத் தொடங்கினான். அப்போது முருகன் சிறுவன் வடிவில் சிவகிரியான பழநி மலைக்குன்றின் மீதேறி தனக்கே உரியது என்று கூறினார். வெகுண்டு எழுந்த இடும்பாசுரன் சிறுவனைத் தாக்க முயன்று இறந்தான்.
குருநாதரான அகத்தியரின் உதவியை இடும்பனின் மனைவியான இடும்பி நாடினாள். சிவகிரியில் வீற்றிருக்கும் சிறுவன் முருகப்பெருமான் என்பதை உணர்ந்த அகத்தியர், தன் சீடருக்கு உயிர்ப்பிச்சை அளிக்குமாறு வேண்டினார்.
முருகனும் இடும்பனுக்கு உயிர் கொடுத்ததோடு பழநிமலையின் காவலனாகவும் நியமித்தார். இதன் பின்னரே முருகன் அடியார்களும் இடும்பன் போல காவடி சுமக்கும் முறையை உருவாக்கினர்.

