ADDED : ஆக 11, 2025 02:33 AM

பாலக்காடு:வாடிக்கையாளர்களை ஏமாற்றி, 1 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில், தனியார் நிதி நிறுவன உரிமையாளர், அவரது மகன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கேரளா மாநிலம், பாலக்காடு மாவட்டம், கோங்காடு பகுதியை சேர்ந்தவர் ராஜன், 72. இவரது மகன் ராகேஷ், 35. கேரளச்சேரி என்ற பகுதியில் 'ஸ்ரீ பூராநிதி லிமிடெட்' என்ற பெயரில் தனியார் நிதி நிறுவனம் நடத்தி வந்தனர்.
அடகு வைத்த நகையை திருப்பி வாங்க வந்த வாடிக்கையாளர்களிடம், பணத்தை வாங்கிய பின், 'நகை பிறகு தருகிறோம்' எனக்கூறி, திருப்பி அனுப்பினர். பின், நிறுவனத்தின் செயல்பாடுகளை நிறுத்திவிட்டனர்.
வாடிக்கையாளர்கள் புகாரில், கோங்காடு இன்ஸ்பெக்டர் சுஜித்குமாரின் தலைமையிலான போலீசார் நடத்திய விசாரணையில், இந்த நிறுவனம், 100 வாடிக்கையாளர்களை ஏமாற்றி, 1 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளது தெரியவந்தது. தலைமறைவான நிறுவன உரிமையாளர்களான ராஜன் மற்றும் ராகேஷை, பாலக்காடு நகரில் கைது செய்தனர்.