பரமேஸ்வர் மீது வழக்கு பதிய பிறப்பித்த உத்தரவுக்கு தடை
பரமேஸ்வர் மீது வழக்கு பதிய பிறப்பித்த உத்தரவுக்கு தடை
ADDED : ஏப் 24, 2026 04:08 AM
உத்தர கன்னடா: உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் மீதான பந்தய வழக்கு பதிவு செய்ய, கர்நாடக உயர் நீதிமன்றம் தடை விதித்து உள்ளது.
கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஸ்வர்; துமகூரு மாவட்டம் கொரட்டகெரே காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வாக உள்ளார். அம்மாவட்ட பொறுப்பு அமைச்சராகவும் இருக்கிறார். கடந்த மாதம் துமகூரில், கல்லுாரிகளுக்கு இடையிலான கபடி போட்டி நடந்தது. இறுதி போட்டியை காண பரமேஸ்வர் சென்றிருந்தார்.
போட்டியை பார்த்துக் கொண்டிருந்த அவர், தன் அருகே அமர்ந்திருந்த கலெக்டர் சுபா கல்யாணிடம், விஜயபுரா அணி வெற்றி பெறும் என்று கூறி, 500 ரூபாய் பந்தயம் கட்டினார். ஆனால், இறுதியில் தட்சிண கன்னடா அணி வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற அணிக்கு பரிசு அளிக்கும் போது, கலெக்டரிடம் பந்தயம் கட்டி தோற்றது குறித்து வேடிக்கையாக பேசினார்.
பந்தயம் வைத்து சூதாடுவதை தடுக்க வேண்டிய உள்துறை அமைச்சரே, சூதாட்டத்தை ஊக்குவிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. பரமேஸ்வர் மீது வழக்குப்பதிய உத்தரவிட வேண்டும் என்று, பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றத்தில், சமூக ஆர்வலர் நாகபூஷண் மனுத்தாக்கல் செய்தார்.
இம்மனுவை விசாரித்த நீதிபதி சிவகுமார், 'பரமேஸ்வர் மீது வழக்குப்பதிவு செய்வதுடன், அவரிடம் முழுமையான விசாரணை நடத்த வேண்டும்' என்று, துமகூரின் கொடிகேஹள்ளி போலீசாருக்கு உத்தரவிட்டார். தன் மீது வழக்கு தொடர உத்தரவிட்ட மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் பரமேஸ்வர் மனுத்தாக்கல் செய்தார்.
இம்மனு, நீதிபதி சுனில் தத் யாதவ் முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
பரமேஸ்வர் தரப்பு வக்கீல் பனீந்திரா: 2025 அக்டோபர், 19ம் தேதியன்று நடந்த கபடி போட்டியில், தட்சிண கன்னடா அணி தோற்றது. இதனால், வெற்றி பெறும் என பந்தயம் கட்டியதால் கலெக்டர் தோற்றுவிட்டார் என்று நகைச்சுவையாக பரமேஸ்வர் கூறினார்.
முதலில் போலீசார் கூறியதை முழுமையாக புரிந்து கொண்டு, அதன் பின்னரே மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்ற நீதிபதி விசாரணைக்கு உத்தரவிட்டிருக்க வேண்டும்.
எதிர்மனுதாரர் நாகபூஷண் தரப்பு வக்கீல் உமாபதி: இவ்வழக்கு, எப்.ஐ.ஆர்., பதிவு செய்வதற்கு முந்தைய நிலையில் உள்ளது. புகார்தாரர் வீடியோ காட்சிகள் மற்றும் அது தொடர்பான ஆவணங்களை சம்பந்தப்பட்ட போலீசாரிடம் சமர்ப்பித்து உள்ளார்.
உள்துறை அமைச்சரின் அறிக்கை, சமூக வலைதளங்களில் பரவி உள்ளது. மேலும், நாளிதழ்களிலும் இது குறித்த செய்திகள் வெளியாகி உள்ளன. எவ்விதமான முதல்கட்ட விசாரணையும் நடத்தாமல், அவருக்கு ஆதரவாக போலீசார் செயல்பட்டு உள்ளனர். ஏனெனில், மனுதாரராக இருப்பது உள்துறை அமைச்சராவார். அவர் எந்த கும்பலை சேர்ந்தவர் என்பதை விசாரணை மூலம் கண்டறிய வேண்டும்.
நீதிபதி சுனில் தத் யாதவ்: மாஜிஸ்டிரேட் நீதிமன்றம் போலீசாரின் வாதத்தை கேட்காமல், வழக்கு பதிவு செய்யும்படி கடந்த, 21ம் தேதி உத்தரவிட்டு உள்ளது. அந்த உத்தரவுக்கு தடை விதிக்கப்படுகிறது.
