உள்ளூர் செய்திகள்

/ சினிமா / விமர்சனம் / இருமுடி கட்டு

இருமுடி கட்டு

தயாரிப்பு : மைத்ரிமூவிமேக்கர்ஸ்
இயக்கம் : சிவா நிர்வானா
நடிப்பு : ரவிதேஜா, பிரியாபவானிசங்கர், ஸ்வாசிகா, நக் ஷத்திரா சாய்குமார்.
ஒளிப்பதிவு : விஷ்ணுசர்மா
இசை : ஜி.வி.பிரகாஷ்குமார்
வெளியான தேதி : ஆகஸ்ட் 21, 2026
நேரம் : 2 மணிநேரம் 25 நிமிடம்
ரேட்டிங் : 2.75 / 5

ஆந்திராவில் ஒரு சின்ன கிராமத்தில் அழகான மனைவி பிரியா பவானி சங்கர், அன்பான மகள் நக் ஷத்திரா என வசிக்கும் ரவி தேஜா ஒரு முன்கோபி, முரடர், பக்கா குடிகாரர். சபரிமலைக்கு மாலை போட்டு இருக்கும்போது மட்டும் குடிக்க மாட்டார். மலைக்கு போய்விட்டு ஊர் திரும்பும்போது வீட்டுக்கு செல்லாமல் வெளியே சரக்கு அடிக்கிற அளவுக்கு மதுவுக்கு அடிமையானவர். மணிகண்டா என பெயர் சூட்டியிருக்கும் மகள் தான் அவர் உலகம். அந்த ஊரில் குருசாமியாக இருப்பவர் சாய்குமார். ஸ்கூல் டீச்சர் ஸ்வாசிகா வடிவில் அந்த ஊர் பள்ளி மாணவிகளுக்கு சில பிரச்னைகள் ஆரம்பிக்கிறது. சிலர் மர்மமான முறையில் இறக்கிறார்கள். ஒருகட்டத்தில் ரவிதேஜா மகளும் இறக்கிறார். அதன் பின்னணி என்ன? மகள் இறப்புக்கு காரணத்தை ரவி தேஜா எப்படி கண்டுபிடிக்கிறார். அதற்கு காரணமானவர்களை என்ன செய்கிறார் என்பது இருமுடி கட்டு படத்தின் கதை. தெலுங்கில் வெளியான இந்த படம் தமிழிலும் டப்பாகி வந்துள்ளது

தெலுங்கில் பல படங்களில் மாஸ் ஆக நடித்த ரவி தேஜா இதில் குடிகாரனாக, பாசக்கார அப்பாவாக, ஐயப்ப பக்தராக புது பரிமாணத்தில் வருகிறார். அவரின் இயல்பான நடிப்பு , முன்கோபம், வில்லன்களை அடித்து துவைக்கும் இடம் வேறுவகை மாஸ். ஆனால், இதை விட பல இடங்களில் அப்பாவாக பாசத்தை பொழிகிறார். டீன்ஏஜ் மகள்தான் தனது உலகம் என வாழ்கிறார். அதேபோல் மகள் நக் ஷத்திராவும் தினமும் காலையில் முதல் மாலை வரை நடந்ததை அப்பாவிடம் சொல்கிறார். அந்த அப்பா, மகள் பாசம் படத்தின் பெரிய ஹைலைட். அப்பா பாசத்தில் தன்னை அடிக்க ஆளில்லை என்று சொல்லும் அளவுக்கு பல இடங்களில் நடிப்பில் முத்திரை பதிக்கிறார். சில இடங்ளில் அழவும் வைத்து விடுகிறார். படம் பார்ப்பவர்களுக்கு தங்கள் அப்பா அல்லது மகள் நினைவுகள் வந்து போவது நிச்சயம்.

ரவிதேஜா மகளாக வரும் நக் ஷத்திரா கதைக்கு சரியான தேர்வு. அந்த சிறுமியின் வேகமாக, குறும்புதனமான பேச்சு, நடிப்பு, அப்பா பாச சீன்கள் செம. இடைவேளைக்குபின் ஒரு கட்டத்தில் அவரின் பிடிவாதம், அதனால் ஏற்படும் விளைவுகளும் பீல் பண்ண வைக்கிறது.

ஹோம்லியான அம்மாவாக வருகிறார் பிரியா பவானி சங்கர். குருசாமியாக வரும் சாய்குமார் நடிப்பும், அவர் கேரக்டர் தன்மையும் பிளஸ். கறார் டீச்சராக வரும் ஸ்வாசிகா, ஒருகட்டத்தில் இன்னொரு வில்லத்தனத்துக்கு மாறுகிறார். நுாறுசாமி, லப்பர் பந்து ஸ்வாசிகாவாக இது என்று கேட்கும் அளவுக்கு அவர் நடிப்பில் அப்படியொரு கொடூரத்தனம். என்ன, டீச்சரை இப்படிப்பட்ட மோசமான கேரக்டரில் காண்பித்து இருக்க வேண்டாம். இவர்களை தவிர கிராமத்து வில்லன்கள், அஜய்கோஷ், அந்த ஊர் பள்ளி மாணவிகள் என எல்லாரும் பக்கா பொருத்தம்.

தெலுங்கு படம் என்பதால் அந்த சாயல் நிறையவே இருக்கிறது. ஆனால், தமிழ் டப்பிங் பக்கா. ஆக் ஷன் காட்சிகளில் அனல் பறக்க விடுகிறார் ரவிதேஜா. அதேசமயம், கிளைமாக்ஸ், அதற்கு முந்தைய காட்சிகளில் கலங்க வைத்துவிடுகிறார். தனது மகள் சாவுக்கு காரணமானவர்களை அவர் கண்டுபிடிப்பது, அவர்களை பழிவாங்குவது, அதற்கான சில ஏற்பாடுகளை செய்வது விறுவிறு திரைக்கதை. என் மகள் மட்டுமல்ல, ஊரில் உள்ள எல்லா பெண் குழந்தைகளும் என் மகள் தான் என்று அடிக்கடி டயலாக் பேசிவிட்டு, ஊர் பெண் குழந்தைகளுக்காக அவர் செய்யும் செயல்கள் அவரை உண்மையிலே மாஸ் ஹீரோவாக்குகிறது. ஜி.வி.பிரகாஷ் ஐயப்பசாமி பாடலில் ஆன்மிக மணம் வீசுகிறது. விஷ்ணு ஒளிப்பதிவு அந்த கால கிராமம், அந்த வாழ்வியலை அழகாக காண்பிக்கிறது.

முதற்பாதியில் மென்மையாக செல்லும் கதை, அடுத்து பாலியல் சீண்டல், வன்கொடுமை, பள்ளி மாணவிகள் என வேறுதிசைக்கு செல்கிறது. வில்லன்கள் போர்ஷனும் இழுக்கிறது. பாலியல் பிரச்னை சீன்களை கொஞ்சம் மறைமுகமாக எடுத்து இருக்கலாம். சில சீன்களில் கண்களை மூடிக்கொள்ள வேண்டிய நிலை. கிளைமாக்சில் மகளுக்காக ரவி தேஜா செய்யும் சடங்குகள் கண்கலங்க வைக்கிறது. தெலுங்கு படம்தான், ஆனால், அந்த மாதிரி இல்லை. பாசக்கதையாக, உணர்வுபூர்வமான கதையாக இருப்பதால் அனைத்து தரப்பையும் கவர்கிறது. குறிப்பாக, மகள்களை பெற்ற அப்பாக்கள் இருமுடி கட்டு படம் பார்த்தால் கண் கலங்குவதும், மகள் மீதான பாசத்தை அதிகரிப்பதும், ஒருவித அச்ச உணர்வில் தவிப்பதும் உறுதி. பெண் பிள்ளைகளை பயத்துடன் அல்ல, தைரியத்துடன் வளர்க்க வேண்டும் என்று படம் சொல்லும் செய்தி மனதில் நிற்கிறது. தெலுங்கு சினிமாவில் ஒரு மலையாள படம் மாதிரியான அழுத்தமான கதை கொடுத்து அசத்தியிருக்கிறார் இயக்குனர் சிவா நிர்வானா. தமிழ் ரசிகர்களும் படம் கனெக்ட் ஆகிறது.

இருமுடி கட்டு - மகள் மீது உயிராக இருக்கும் ஒரு ஐயப்ப பக்தரின் கதை



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !