வாசகர்கள் கருத்துகள் (1)
முதலில் 3.25 மார்க் போட்டு இருந்தீங்க அப்புறம் கொஞ்சம் நேரத்தில் எப்படி 2.75 ஆச்சி
தயாரிப்பு ; ஆசிர்வாத் சினிமாஸ்
இயக்கம் ; ஜீத்து ஜோசப்
நடிப்பு ; மோகன்லால், மீனா, பிஜுமேனன், அன்சிபா ஹாசன், எஸ்தர் அனில், சித்திக், முரளிகோபி, ஆஷா சரத், கலாபவன் சாஜன், வீணா நந்தகுமார்
ஒளிப்பதிவு ; சதீஷ் குறூப்
இசை ; அனில் ஜான்சன்
வெளியான தேதி ; மே 21, 2026
நேரம் ; 2 மணி நேரம் 39 நிமிடம்
ரேட்டிங் - 2.75/5
இரண்டு பாகங்களின் கதைச்சுருக்கம்:
மோகன்லாலின் மனைவியான மீனா, தன்னிடமும் தன் மகளிடமும் தகாத முறையில் நடந்து கொள்ள முயற்சிக்கும் பிரபல பெண் போலீஸ் அதிகாரியின் மகன் வருண் பிரபாகரை கொல்கிறார். தனது குடும்பத்தை காப்பாற்றுவதற்காக வருணின் உடலை மறைத்து, போலீஸ் விசாரணைகளில் சாமர்த்தியமாக நாடகமாடி தனது குடும்பத்தை காப்பாற்றுகிறார் மோகன்லால். முதல் பாகத்தில் வருணின் இறந்த உடலை தோட்டத்தில் புதைத்திருப்பதாக அவரை சிக்க வைக்க முயற்சி நடந்தது. இரண்டாம் பாகத்தில் வருணின் எலும்புக்கூட்டை வைத்து மோகன்லாலை மடக்க முயற்சி நடந்தது. இரண்டிலிருந்தும் சாதுரியமாக தப்பினார் மோகன்லால்.
இந்த மூன்றாம் பாகத்தில் என்ன நடக்கிறது ?
போலீசாரிடமிருந்து எந்த பிரச்னையும் இல்லாத நிலையில், ஒரு சினிமா தயாரிப்பாளராக மாறும் மோகன்லால், இன்னொரு பக்கம் தனது மூத்த மகளுக்கு மாப்பிள்ளை தேடுகிறார்.. உள்ளூரில் நல்ல வரன்கள் அமைந்தாலும், யாரோ இருவர் அந்த சம்பந்தங்களை எல்லாம் வேண்டுமென்றே பொய்களை கூறி தடுக்கிறார்கள். இதனால் வெளிநாட்டில் வேலை பார்க்கும் ஒரு மாப்பிள்ளைக்கு தனது மகளை திருமணம் பேசி முடிக்கிறார்..
அதே சமயம் இந்த திருமணத்தை தடுப்பதற்கு பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்கிற உண்மையை கண்டுபிடிக்கும் முயற்சியில் அவர் இறங்கும்போது, அவரால் முதல் பாகத்தில் பாதிக்கப்பட்ட ஒருவரும், இரண்டாவது பாகத்தில் பாதிக்கப்பட்ட ஒருவரும் ஒன்றிணைந்து இதை செய்கிறார்கள் என்கிற உண்மை தெரிய வருகிறது. இதற்கு மூளையாக இருந்து செயல்படுவது யார் என்பதும் தெரிய வருகிறது.
முன்பு போலவே இதிலிருந்தும் தன் குடும்பத்தை மோகன்லாலால் காப்பாற்ற முடிந்ததா? தனது மகளின் திருமணத்தை சிக்கலின்றி அவரால் நடத்த முடிந்ததா? இந்த பிரச்னையை இனி வளரவிடக்கூடாது என்பதற்கு அவர் என்ன தீர்வு காண்கிறார் என்பதே மீதிக்கதை.
இரண்டு பாகங்களிலும் பார்த்த அதே மோகன்லால், இன்னும் கொஞ்சம் பக்குவப்பட்ட, அதேசமயம் அதிகப்படியான சீரியஸ்னஸ் கொண்ட மனிதராக ஜார்ஜ்குட்டி கதாபாத்திரத்தை பிரதிபலித்திருக்கிறார்.. எந்நேரம் எந்தப்பக்கம் இருந்து தன் குடும்பத்திற்கு சிக்கல் வருமோ என்ற பதற்றத்தை மனதிற்குள் சுமந்துகொண்டு, அதே சமயம் குடும்பத்தில் நல்ல நிகழ்வை நடத்த வேண்டிய டென்ஷன் கலந்த உணர்வுகளை படம் முழுவதும் அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார். பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க கிளைமாக்ஸில் அவர் எடுக்கும் முடிவு ஒரளவு எதிர்பார்த்தது தான்.
இல்லத்தரசியாக மீனா, மகள்களாக அன்சிபா ஹாசன், எஸ்தர் அனில் ஆகியோர் வழக்கம்போல் கதையோட்டத்துடன் பயணிக்கிறார்கள்..
முதல் பாகத்தில் மிரட்டிய கலாபவன் சாஜன், இரண்டாம் பாகத்தில் மிஸ்ஸிங் ஆனாலும், இந்த மூன்றாம் பாகத்தில் மீண்டும் முக்கிய பொறுப்பை எடுத்துக் கொண்டிருக்கிறார்.. அவரது வன்மம் நிறைந்த நடிப்பு அதிர வைக்கிறது. அதேபோல் இன்னொரு கதாபாத்திரத்தில் நடித்துள்ள தினேஷ் பிரபாகரின் மீதான ட்விஸ்ட்டும் நிச்சயமாக எதிர்பாராத ஒன்றுதான்.
இந்த மூன்றாம் பாகத்தில் புதிதாக பத்திரிகையாளராக இணைந்துள்ள வீணா நந்தகுமார், முடிந்து போன வழக்கை தோண்ட நினைப்பதன் பின்னணியில் ஒரு பத்திரிகையாளருக்கே உள்ள ஆர்வம் மட்டும் காரணம் அல்ல என்று தெரியவரும் உண்மையும் கொஞ்சம் அதிர்ச்சிதான். அந்த கதாபாத்திரத்தை அவர் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
இரண்டு பாகங்களிலும் போலீஸ் அதிகாரியாக மிரட்டிய ஆஷா சரத், இந்த மூன்றாம் பாகத்தில் “ஐயோ பாவம்” என பரிதாபப்பட வைக்கிறார். அந்த அளவுக்கு வெகு சில காட்சிகளில் தான் அவர் வந்து போகிறார்.
“சாது மிரண்டால் காடு கொள்ளாது” என்பதுபோல, அவரது கணவராக நடித்திருக்கும் சித்திக் கதாபாத்திரம் இரண்டு பாகங்களிலும் அடக்கி வாசித்த நிலையில் இதில் விஸ்வரூபம் எடுத்திருப்பதை பார்க்கும்போது, வைராக்கியம் வந்து விட்டால் நல்லவனும் கெட்டவன் ஆவான் என்பதைத்தான் உணர்த்துகிறது.
ஒரு நடிகராகாவே வரும் பிஜூமேனன் ஒப்புக்காக இல்லையில்லை நட்புக்காக சில காட்சிகளில் வந்து செல்கிறார் .இரண்டாம் பாகத்தில் கடுமையாக சீறிய போலீஸ் அதிகாரி முரளிகோபி இதில் பக்குவப்பட்டிருப்பதை பார்க்க ஆச்சர்யமாக இருக்கிறது.
படத்தை விறுவிறுப்பாக்கும் முயற்சியில் தீவிர கவனம் செலுத்தாத அனில் ஜான்சனின் பின்னணி இசையின் பங்களிப்பு சற்றே குறைவுதான். அதே சமயம் சூழலுக்கு ஏற்ற அம்சங்களை இயல்பாக காட்சிப்படுத்தியிருக்கிறார். ஒளிப்பதிவாளர் சதீஷ் குறூப்.
முதல் இரண்டு பாகங்களைப் போல அல்லாமல் முதல் பாதி வரை ரசிகர்களுக்கு பெரிய அளவில் டென்ஷன் ஏற்றாமல் கதையை நகர்த்தியிருக்கிறார் இயக்குனர் ஜீத்து ஜோசப்.. கதை நகர்வதில் தொய்வு இல்லை என்றாலும், விறுவிறுப்பை இது சற்றே குறைக்கிறது. அதே சமயம் இடைவேளைக்கு பிறகு, குறிப்பாக கிளைமாக்ஸுக்கு முந்தைய அரை மணி நேரம் நம்மிடம் பரபரப்பை தொற்றிக் கொள்ள வைத்திருக்கிறார் இயக்குனர் ஜீத்து ஜோசப்..
இதிலும் மோகன்லாலின் சாமர்த்திய திட்டமிடல்கள் இருந்தாலும் கூட, கிளைமாக்ஸில் தனது மகளை காப்பாற்ற அவர் கையாளும் யுத்தி கொஞ்சம் அதிகப்படியோ என்று நினைக்கத் தோன்றுகிறது. அந்த வகையில் முதல் இரண்டு பாகங்களுடன் ஒப்பிடுகையில், இந்த மூன்றாம் பாகம் ஒரு மாற்று குறைவாகத்தான் இருக்கிறது. படம் போரடிக்கவில்லை என்பதும், ஓரளவு விறுவிறுப்பாக இருக்கிறது என்பதும் பிளஸ் பாயிண்ட்..
இந்த மூன்றாம் பாகத்தோடு கதை முடிந்து விடுகிறது என இயக்குனர் ஜீத்து ஜோசப் ஏற்கனவே கூறியிருந்த நிலையில், நான்காம் பாகத்திற்கும் லீட் வைத்து முடித்திருக்கிறார்கள். இனி என்ன செய்யப் போகிறார்களோ...?
திரிஷ்யம் 3 - இனியாவது ஜார்ஜ்குட்டியையும் நம்மையும் நிம்மதியா விடுங்கப்பா...
முதலில் 3.25 மார்க் போட்டு இருந்தீங்க அப்புறம் கொஞ்சம் நேரத்தில் எப்படி 2.75 ஆச்சி