சட்டென்று மாறுது வானிலை
தயாரிப்பு : பிவி பிரேம்ஸ்
இயக்கம் : பாபு விஜய்
நடிப்பு : ஜெய், மீனாட்சிகோவிந்தராஜன், யோகிபாபு, கருடா ராம்
ஒளிப்பதிவு : ரிச்சர்டு எம் நாதன்
இசை : கிரிஷ்
வெளியான தேதி : மே 15, 2026
நேரம் : 2 மணிநேரம்
ரேட்டிங் : 2 / 5
ஐடி நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஜெய், மந்திரி மகளான மீனாட்சி கோவிந்தராஜனை காதல் திருமணம் செய்கிறார். தனது ரிசார்ட்டில் தங்கும் ஜோடிகளின் அந்தரங்கங்களை ரகசிய வீடியோ எடுத்து, அதை டார்க்நெட்டில் வெளியிட்டு பணம் சம்பாதிக்கிறார் வில்லன் கருடா ராம். ஜெய், மீனாட்சி கோவிந்தராஜன் ஜோடியும் அவர் ரிசார்டில் தங்க, என்ன நடக்கிறது. மனஸ்தாபத்தால் பிரியும் இந்த ஜோடிகள் சேர்ந்தார்களா? வில்லனுக்கு என்ன ஆனது என்பது பாபு விஜய் இயக்கிய சட்டென்று மாறுது வானிலை படக்கதை
முதற்பாதியில் காதல் கதை, பிற்பாதியில் கொஞ்சம் திரில்லர் கதை என கலந்து கொடுத்து இருக்கிறார் இயக்குனர் பாபு விஜய். இவர் ஏ.ஆர்.முருகதாஸ் உதவியாளர். ஐடி ஊழியர், காதலன், கணவன், வில்லனை அழிக்கும் கோபக்கார இளைஞன் என காட்சிகளுக்கு ஏற்ப, மாறி, மாறி வருகிறார் ஜெய். காதல் காட்சிகளில் அவர் நடிப்பு, குறும்புதனம் ஓகே. சில இடங்களில் விஜய் மாதிரியான மேனரிசம் காண்பிக்கிறார். அவர் மாதிரியே ஆடுகிறார். கணவனாக வரும் காட்சிகளில் சீரியஸ் ஆக இருக்கிறார்.இடைவேளைக்குபின் வில்லனுடன் மோதல், வேறுதிட்டம் என இன்னொரு முகம் காண்பித்து இருக்கிறார். ஐடி ஊழியர் சீனில் வழக்கமான நடிப்பு. இந்த நான்கு இடத்திலும் அவர் பாஸ் மார்க்தான் வாங்குகிறார். சில சீரியசான இடங்களில் அவரின் சீரியஸ் நடிப்பு செட்டாகவில்லை. அவரை சரியாக இயக்குனர் பயன்படுத்தவில்லை என்று தோன்றுகிறது
ஹீரோயினாக வரும் மீனாட்சி கோவிந்தராஜன் அழகாக இருக்கிறார். கொஞ்சம் கவர்ச்சியாக நடித்து இருக்கிறார். பாடல்காட்சி ஓகே. மற்றபடி, எதுவும் இல்லை. வில்லனாக வரும் கருடா ராம் கேரக்டர் மாறுபட்டது. அவர் சொல்லும் டெக்னிக்கல் விஷயங்கள், அவர் செய்யும் தவறான காரிய பின்னணி புதுசாக இருக்கிறது, ஆனால், அவர் நடிப்பில் அவ்வளவு செயற்கை த னம். அதேபோல் வில்லனாக சிலசீன்களில் வரும் சரவண சுப்பையா, மந்திரியாக வரும் ஹீரோயின் அப்பா,போலீஸ் அதிகாரியாக வரும் ரிச்சர்ட் எம் நாதன், போலீஸ் இன்ஸ்பெக்டராக வரும் ஸ்ரீமன், ஐடி அதிகாரியாக வரும் சத்யன் என , யார் நடிப்பிலும் இயல்புதன்மை இல்லை, நடித்து தள்ளியிருக்கிறார்கள்
ஹீரோவின் சக ஐடி ஊழியராக வரும் யோகி பாபு சற்றே வில்லத்தனத்தை முயற்சி செய்து இருக்கிறார். அவர் காமெடியும் செட்டாகவில்லை, வில்லத்தனமும் ரசிக்க முடியவில்லை. ஜொள்ளு பார்ட்டியாக, லேப் திருடனாக வருபவர் ஒரு இடத்தில் கூட சிரிப்பை தரவில்லை. தமிழ் சினிமாவுக்கு இப்படியொரு கஷ்ட காலம். அதேபோல், ஹீரோயின் காதலனாக வரும் இன்னொரு வில்லனும் மனதில் நிற்கவில்லை. இப்படியாக நடிகர் தேர்வு படத்தை பலவீனமாக்குகிறது. அடுத்து திரைக்கதையில் விறுவிறுப்பு இல்லை. அந்தரங்க வீடியோவை விற்று சம்பாதிக்கும் வில்லன், அதை கண்டுபிடித்து பழிவாங்கும் ஹீரோ என்ற நல்ல கரு. ஆனால், அதை முருகதாஸ் உதவியாளராக இருந்தும் சொதப்பி இருக்கிறார் இயக்குனர்.
காதல், ஐடி வாழ்க்கை, சண்டை என முதல்பாதி சுமாராக போகிறது. இடைவேளைக்குபின் படம் ரொம்பவே போராடிக்கிறது. கணவன் மனைவி மோதல், வில்லனின் திட்டம், தற்கொலை, கொலை என கதை தலையை சுற்ற வைக்கிறது. இடையில் மந்திரி பிரச்னை, ஆதரவற்றோர் இல்லம், பணப்பிரச்னை என ஏகப்பட்ட தேவையில்லாத சீன்கள். போலீஸ் விசாரணை சீன்களிலும் புதுமை இல்லை. பாரதியாரின் பாடலை இசையமைப்பாளர் கிரிஷ் ஒரு இடத்தில் பயன்படுத்தியது புத்திசாலிதனம். ரிச்சர்ட் எம் நாதன் நல்ல கேமராமேன் என்றாலும் எங்கும் அது தெரியவில்லை.
ஓட்டலில், ரிசார்ட்டில், பொது இடத்தில் தங்கும் ஜோடிகள் கவனமாக இருக்க வேண்டும். எங்கும் ரகசிய கேமரா இருக்கலாம். உங்கள் அந்தரங்கம் விற்கப்படலாம் என்ற எச்சரிக்கை கரு பாராட்டுக்கு உரியது. ஆனால், அதை கதையை சொன்ன விதத்தில் படம் ஏமாற்றுகிறது. கதையில் காதலும் செட்டாகவில்லை. திரில்லர் காட்சிகளும் ரசிக்கும்படி இல்லை. கிளைமாக்சும் சுமார்.
சட்டென்று மாறுது வானிலை - ஜெய்க்கு எதுவும் மாறல...