உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / திரிஷ்யம் 4ம் பாகம் : தயாரிப்பாளர், இயக்குநர் உறுதி

திரிஷ்யம் 4ம் பாகம் : தயாரிப்பாளர், இயக்குநர் உறுதி

மலையாள சினிமாவில் முதல் 50 கோடி வசூல் படம் 'திரிஷ்யம்'. மோகன்லால், மீனா, ஆஷா சரத் நடித்த இந்தப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. ஜீத்து ஜோசப் இயக்கிய இந்தப் படத்தை ஆண்டனி பெரும்பாவூர் தயாரித்திருந்தார். இதன் இரண்டாம் பாகமும் பெரிய வெற்றி பெற்றது. சமீபத்தில் வெளியான 3ம் பாகமும் வசூல் ரீதியாக திருப்தியான படமாக இருந்தாலும் முந்தை இரண்டு பாகத்தைப்போன்று அமையவில்லை என்ற விமர்சனம் எழுந்தது.

இதனால் இதன் 4வது பாகம் கைவிடப்பட்டதாக தகவல்கள் வெளியானது. ஆனால் தற்போது 4வது பாகம் வரும் என்கிற தகவலை இயக்குநர் ஜீத்து ஜோசப்பும், தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூரும் தெரிவித்திருக்கிறார்கள்.

ஜீத்து ஜோசப் அளித்த பேட்டி ஒன்றில் ''ஒவ்வொரு பாகம் முடியும்போதும், அடுத்த பாகத்திற்கான கதையை யோசிக்குமாறு தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். முதல் பாகத்திற்குப் பிறகு இரண்டாவதையும், இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பின் போது மூன்றாவது பாகத்தையும் யோசிக்கச் சொன்னார்கள். இப்போது நான்காம் பாகத்திற்கான பணிகளைத் தொடங்குமாறு கூறுகிறார்கள். இருப்பினும், அவசர அவசரமாக அடுத்த பாகத்தை எடுக்க விருப்பமில்லை. கதாபாத்திரங்களின் அடுத்தகட்ட வளர்ச்சியைப் பற்றி யோசித்து நிதானமாகவே கதையை உருவாக்க விரும்புகிறேன் எனக் கூறியுள்ளார்.

இந்த நிலையில், விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டு பேசிய ஆண்டனி பெரும்பாவூர், ''திரிஷ்யம் படத்தின் அடுத்த பாகம் நிச்சயம் உருவாகும். இதை நான் மனதார, முழு நம்பிக்கையோடு கூறுகிறேன் என அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !