பழைய பாக்கியால் முதல் நாளே இரண்டு மணி நேரம் தடைப்பட்ட ராம் கோபால் வர்மாவின் படப்பிடிப்பு
பாலிவுட்டின் பிரபல இயக்குநர் ராம் கோபால் வர்மா, தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் கிட்டத்தட்ட ஐம்பது படங்களுக்கு மேல் இயக்கியுள்ளார். சில படங்களை அவரே தயாரித்தும் உள்ளார். சமீப காலமாக அவரது படங்கள் பெரிய வரவேற்பு பெறாத நிலையில், தற்போது மீண்டும் அதிரடியாக 'போலீஸ் கம்பெனி' என்கிற படத்தை இயக்குகிறார்.
இதில் பாலிவுட் நடிகர் ஹர்ஷவர்தன் ராணே கதாநாயகனாக போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கிய நிலையில், முதல்நாள் படப்பிடிப்பு அன்றே மேற்கிந்திய சினிமா தொழிலாளர்கள் கூட்டமைப்பை சேர்ந்த பிரதிநிதிகள் படப்பிடிப்பு தளத்திற்கு வந்து படப்பிடிப்பை நிறுத்தினார்கள்.
கடந்த 2018ல் ராம் கோபால் வர்மா நாகார்ஜுனாவை வைத்து 'ஆபிசர்' என்கிற படத்தை இயக்கியிருந்தார். அந்தத் தயாரிப்பாளரும் அவரே. அந்தப் படத்தில் இந்த கூட்டமைப்பை சேர்ந்த தொழிலாளர்களுக்கு சுமார் 1.32 கோடி ரூபாய் ராம் கோபால் வர்மா பாக்கித் தொகை செலுத்த வேண்டி நிலுவையில் இருந்தது. இந்த தொகையை செலுத்தினால் தான் படப்பிடிப்பு நடக்கும் என்று வந்தவர்கள் கூறினர்.
இப்போதைய 'போலீஸ் கம்பெனி' படத் தயாரிப்பாளர்கள் பூஷன் குமார் மற்றும் பராக் சங்கவி ஆகியோர் இந்தப் பிரச்சினையில் தலையிட்டு, சுமூகமாகப் பேசி நிலுவைத் தொகையை செலுத்துவதாக ஒப்புக் கொண்டனர். இதை அடுத்து, குறிப்பிட்ட ஒரு தொகை வழங்கப்பட்ட பிறகு படப்பிடிப்பு மீண்டும் வழக்கம் போல தொடங்கியுள்ளது.