பாகுபலியின் நண்பன் என்பதால் பூரி ஜெகன்நாத்திற்கு கிடைத்த விஐபி ட்ரீட்மென்ட்.
ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் வெளியான பாகுபலி, தெலுங்கு படங்களை இந்தியாவையும் தாண்டி பல நாடுகளுக்குக் கொண்டு சென்றது. நடிகர் பிரபாஸுக்கு அவரை பாகுபலி என்றே அழைக்கும் அளவிற்கு புகழ் பெருகியது. ஒருமுறை இயக்குநர் பூரி ஜெகன்நாத் தாய்லாந்தில் உள்ள பாங்காங்க் நகருக்குச் சென்றபோது, அவருக்குச் சிறு உடல் நலக்குறைவு ஏற்பட்டு அங்குள்ள ஒரு மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.
அங்கே அவர் காத்திருந்தபோது அவருடன் பேசியதில் இருந்து அவரை இந்தியர் என்று தெரிந்து கொண்ட ஒரு செவிலியர், அவரிடம் பாகுபலி தெரியுமா? என்று கேட்டுள்ளார். அதற்கு பூரி ஜெகன்நாத் தானும் பிரபாஸும் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றை காட்டியதும், அதைப் பார்த்த செவிலியர் உடனடியாக அந்த புகைப்படத்தை அங்கிருந்து மருத்துவரிடம் கொண்டு சென்று, இவர் பாகுபலி நண்பர் என்று கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து அவரை நீண்ட நேரம் காத்திருக்க வைக்காமல் முன்னுரிமை கொடுத்து சிகிச்சை அளிக்கப்பட்டதாம்
இந்த சம்பவத்தை பூரி ஜெகன்நாத் ஒரு ஆடியோவாக பிரபாஸிற்கு அனுப்ப, அந்த சமயத்தில் பாகுபலி 2 படப்பிடிப்பில் இருந்த ராஜமவுலியிடம் அவர் இதை காட்ட, பாகுபலிக்குக் கிடைத்த புகழ் குறித்து ஆச்சரியப்பட்டு போனார்களாம். இந்த சம்பவத்தை நடிகர் பிரபாஸ் 'பாகுபலி - த பிகினிங்' என்கிற ஆவணப் படத்தில் கூறியுள்ளார்.