உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மலையாள நடிகர் சங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்தது ஏன் - ஸ்வேதா மேனன் விளக்கம்

மலையாள நடிகர் சங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்தது ஏன் - ஸ்வேதா மேனன் விளக்கம்

'அம்மா' என்று சுருக்கமா அழைக்கப்படும் மலையாள நடிகர் சங்கம் துவங்கி 30 ஆண்டுகளுக்கு மேலாகிறது. சமீபகாலம் வரை சங்கம் முழுக்க முழுக்க ஆண்கள் ஆதிக்கத்தில் இருந்து வந்தது. நடிகைளுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகளை ஆராய்ந்த ஹேமா கமிட்டி பெரும்பாலான நடிகர்கள் மீது குற்றம்சாட்டியது. இதை தொடர்ந்து நடிகர் சங்கத்தில் ஆண் நடிகர்களிடையே சலசலப்பு உருவானது. தலைவராக இருந்த மோகன்லால் உள்ளிட்ட பலரும் சங்கத்தில் இருந்து சற்று விலகி இருந்தனர்.

அதன்பிறகு கடந்த ஆண்டு ஆக்ஸ்ட் மாதம் நடைபெற்ற சங்க தேர்தலில் புதிய தலைவராக நடிகை ஸ்வேதா மேனன் தேர்வுசெய்யப்பட்டார். அம்மா அமைப்பின் முதல் பெண் தலைவராக ஸ்வேதா மேனன் பதவியேற்றார். அவரோடு பெரும்பாலான பதவிகளுக்கு நடிகைகளே தேர்வு செய்யப்பட்டார்கள்.

கடந்த சில வாரங்களாக நிர்வாகிகள் இடையே கடும் விவாதங்கள் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்தனர். விஷயம் போலீஸ் ஸ்டேஷன், நீதிமன்றம் வரை சென்றது. இந்த நிலையில் சங்கத்தின் பொதுக்குழு நேற்று நடந்தது. இதில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது, கடுமையான விவாதங்களால் மோதிக் கொண்டனர். இந்த நிலையில் பதவியேற்ற 10 மாதங்களில் தலைவர் ஸ்வேதா மேனன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அத்துடன் பொதுச் செயலாளர் குக்கூ பரமேஸ்வரன் உள்ளிட்ட நிர்வாகக் குழுவினரும் ராஜினாமா செய்துள்ளனர்.

ராஜினாமா செய்தபின்னர் ஸ்வேதா மேனன் நிருபர்களிடம் கூறும்போது, நானும் எனது 17 பேர் கொண்ட நிர்வாகக் குழுவும் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்துள்ளோம். திட்டமிட்டே எங்களை வெளியேற்ற சிலர் சதி செய்துள்ளனர். முன்னரே தயார் செய்யப்பட்ட ஒரு அஜெண்டாவைப் பயன்படுத்தி, நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து எங்களை வேட்டையாட முயன்றனர். குற்றம் சாட்டப்பட்டவர்களின் கைகளுக்கு மீண்டும் சங்கத்தைக் கொண்டு செல்லும் முயற்சியே இது.

நிர்வாகக் குழுவில் நாங்கள் வெறும் பொம்மைகளாகச் செயல்பட வேண்டும் என்று சிலர் எதிர்பார்க்கிறார்கள். எனக்கென்று ஒரு தனிப்பட்ட அடையாளம் இருக்கிறது. அந்த அடையாளத்தைப் அடகு வைத்துவிட்டு, ஒரு பொம்மையாகச் செயல்பட்டு சங்கத்தை வழிநடத்த முடியாது. அதனால்தான், சுயமரியாதையுடன் பதவியிலிருந்து விலகுகிறேன். தலைவர் பதவியில் இருந்து மட்டுமல்ல அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் விலகுகிறேன்.

முந்தைய நிர்வாக கமிட்டியில் பாபுராஜ் செய்த பல காரியங்களில் பெரும் குளறுபடிகள் உள்ளன. சங்கத்தின் கண்ணியத்தைக் கருதி இதுவரை அமைதி காத்து வந்தேன். ஆனால், நான் இப்போது அம்மா சங்கத்தில் இல்லை. எனவே இனி அத்தனை விஷயங்களையும் ஊடகங்களுக்கு முன்னால் வெளிப்படையாகப் பேசப் போகிறேன். பெண்களின் தலைமைக்கு சவால் விடுக்கும் சூழல் உருவாகியுள்ளது. இதுபோன்ற ஆதிக்க மனப்பான்மையுடனான அமைப்பில் தொடர்வதில் அர்த்தமில்லை என்றார்.

நடிகர் சங்கத்தின் தற்போதைய சூழல் மலையாள சினிமாவில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !