பிளாஷ்பேக் : மக்கள் பணியின்போதே மரணம் அடைந்த நடிகை
விஜயகுமாரின் கலை குடும்பத்தில் இருந்து நிறைய பேர் நடிக்க வந்தார்கள். இதில் விஜயகுமார், அருண் விஜய் தவிர வேறு யாரும் நிலைத்து நிற்க முடியவில்லை. வனிதா சினிமாவில் பெரிதாக சாதிக்கவில்லை என்றாலும் சமூக வலைத்தளங்களில் தன்னை பிசியாக வைத்துக் கொண்டிருக்கிறார். இந்த குடும்பத்தில் இருந்து வந்த இன்னொரு வாரிசுதான் சிந்து. மஞ்சுளா விஜயகுமாரின் தங்கை சியாமளாவின் மகள். மேலும் இவர் நடிகர் சஞ்சீவ்வின் அக்கா ஆவார்.
விஜயகாந்த் நடித்த பொன்மனச் செல்வன், இணைந்த கைகள், புலன் விசாரணை படங்களில் சிறிய கேரக்டரில் நடித்த சிந்து, 'பாட்டாளி மகன்' படத்தின் மூலம் நாயகியானார். இந்த படத்தில் அவர் அர்ஜூன் ஜோடியாக நடித்தார். அதன் பிறகு அவர் ஏராளமான படங்களில் நடித்தாலும் நாயகியாக நடித்தது குறைவுதான். 'ஏழை ஜாதி' என்ற படம் அவர் நடித்த படங்களில் முக்கியமானது. சினிமா வாய்ப்பு குறைந்ததும் சின்னத்திரைக்கு சென்ற அவர் சின்ன பாப்பா பெரிய பாப்பா, அண்ணாமலை, மெட்டிஒலி, அகல்யா உள்ளிட்ட பல தொடர்களில் நடித்தார்.
மக்கள் சேவையில் மிகுந்த ஆர்வம் கொண்டவர் சிந்து. வெளியில் தெரியாமல் பலருக்கு உதவி வந்தார். சுனாமி ஏற்பட்டபோது பாதிக்கப்பட்ட மக்களுக்காக 2005ம் ஆண்டு உண்டியல் ஏந்தி தெருதெருவாக நிதி வசூல் செய்தார். கடும் வெயியில் நீண்ட தூரம் நடந்து வசூல் செய்த அவர் மயங்கி விழுந்தார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிர் இழந்தார். 33 வயதில் மக்களுக்காக உழைத்து, மறைந்த சிந்துவை பற்றி திரையுலகம் கண்டு கொள்ளவே இல்லை என்பதுதான் பெரிய சோகம்.