கேரள திரைப்பட அகாடமி தலைவர் பதவியை ராஜினாமா செய்த ரசூல் பூக்குட்டி.
ஆஸ்கர் விருது பெற்ற சவுண்ட் இன்ஜினியரான ரசூல் பூக்குட்டி தொடர்ந்து பல படங்களில் பணியாற்றி வருவதுடன் இசையமைப்பாளராகவும் இயக்குனராகவும் கூட புதிய தளங்களில் அடி எடுத்து வைத்தார். அந்த வகையில் கேரளா அரசு சார்பாக விருதுகளுக்கு படங்களை தேர்ந்தெடுப்பது மற்றும் கேரள சர்வதேச திரைப்பட விழாக்களை நடத்துவது ஆகியவற்றில் பொறுப்பு வகிக்கும் கேரள திரைப்பட அகாடமியின் தலைவராக கடந்த அக்டோபர் மாதம் தேர்ந்தெடுக்கப்பட்டார் ரசூல் பூக்குட்டி.. அதற்கு முன்பு தலைவராக இருந்த இயக்குனர் ரஞ்சித் பாலியல் புகார் குற்றச்சாட்டு காரணமாக பதவி விலகியதைத் தொடர்ந்து ரசூல் பூக்குட்டி அந்த பதவிக்கு வந்தார்.
இந்த நிலையில் தற்போது தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார் ரசூல் பூக்குட்டி.. பொதுவாகவே கேரள திரைப்பட அகாடமி என்பது அரசு அமைப்பு என்பதால் ஆளும் அரசின் தாக்கம் எப்போதும் அதில் இருக்கும்.. தற்போது கேரளாவில் புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், தான் அந்த பதவியில் தொடர விரும்பவில்லை என்பதற்காகத்தான் ரசூல் பூக்குட்டி ராஜினாமா செய்துள்ளார் என்று சொல்லப்படுகிறது. ஆனால் இது குறித்து அவர் வெளிப்படையாக எந்த விளக்கமும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.