லப்பர் பந்து வாய்ப்பை நிராகரித்தது ஏன்? : எஸ்ஜே சூர்யா
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் நடிப்பில் லப்பர் பந்து திரைப்படம் வெளியானது. குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதுடன் அதில் நடித்த தினேஷ், ஹரிஷ் கல்யாண் மட்டுமல்லாது கதாநாயகியாக நடித்த சுவாசிகாவுக்கும் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. குறிப்பாக அட்டகத்தி தினேஷின் கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. ஆனால் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் தமிழரசன் பச்சமுத்து அணுகியது நடிகர் எஸ்.ஜே சூர்யாவைத்தான், அவர் இந்த வாய்ப்பை நிராகரித்தற்கு பிறகு தான் அது அட்டகத்தி தினேஷுக்கு சென்றுள்ளது.
இந்த விஷயம் குறித்து சமீபத்திய நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட எஸ்.ஜே சூர்யா பேசும்போது, “லப்பர் பந்து படத்தின் கதை நிஜமாகவே என்னை கவர்ந்தது. நான் இயக்குனரிடம் சொல்லி சில மாற்றங்களை செய்யச் சொன்னேன். அவரும் செய்து கொண்டு வந்தார். அதன் பிறகு இன்னும் சில மாற்றங்களை செய்யச் சொன்னேன். அதையும் கூட அவர் ஏற்றுக் கொண்டார். ஒரு கட்டத்தில் இப்படி ஒரு இயக்குனரிடம் நம்முடைய கருத்துக்களை திணித்து மாற்றங்களை செய்ய சொல்லும்போது அது அவருடைய ஒரிஜினல் கதையை பாதித்து விடுமோ என்கிற குற்ற உணர்ச்சி எனக்கு ஏற்பட்டது. அதனால் அவரை அழைத்து நீங்கள் எனக்காக நீங்கள் இப்படி உங்களுடைய கதையில் மாற்றங்களை செய்ய ஆரம்பித்தீர்கள் என்றால் ஒரு கட்டத்தில் ஒரு இயக்குனராக உங்களது தனித்தன்மையை இழந்து விடுவீர்கள் என்று கூறி அந்த படத்திலிருந்து வெளியேறினேன்' என்று கூறியுள்ளார்.