உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'நீளிரா' படத்தை உயிர்த்தெழச் செய்யுங்கள்: கார்த்திக் சுப்பராஜ் உருக்கமான வேண்டுகோள்

'நீளிரா' படத்தை உயிர்த்தெழச் செய்யுங்கள்: கார்த்திக் சுப்பராஜ் உருக்கமான வேண்டுகோள்

இலங்கை தமிழர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகி இருந்த படம் 'நீளிரா'. போர்களுக்கு நடுவில் நடந்த ஒரு திருமணம் வழியாக போரின் வலியை சொன்ன படம். கார்த்திக் சுப்பராஜ் மற்றும் ராணா இருவரும் இணைந்து இந்த படத்தை தயாரித்தனர். இப்படத்துக்கு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால் வசூல் ரீதியாக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

இந்த நிலையில் தயாரிப்பாளர்களில் ஒருவரான கார்த்திக் சுப்பராஜ் உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: 'நீளிரா' திரைப்படம் ஏப்ரல் 3-ம் தேதி வெளியானது. வெளியான நாளிலிருந்தே இந்த படம், இதைக் கண்டு களித்த ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் அபாரமான வரவேற்பைப் பெற்றுள்ளது.

சோமீதரன் என்கிற ஈழத்து படைப்பாளியின் முதல் படமான 'நீளிரா' -வை திரையரங்கு வெளியீடாக கொண்டு வர பல சவால்களை எதிர்கொண்டோம். அந்த சவால்களை கடந்து நாங்கள் அதை சாதித்துள்ளோம். உணர்வு ரீதியாக எங்களுக்கு இது மிகப்பெரிய வெற்றி. கோடி கோடியாக லாபம் வரும் என்ற நோக்கத்துடன் இந்த படத்தை நாங்கள் தயாரிக்கவில்லை. ஈழத்து போரை சார்ந்த உண்மையான கதைகளையும், படைப்புகளையும், படைப்பாளிகளையும் உலக சினிமா அரங்குகளில் அவர்களின் குரல் கேட்கும் வகையில் ஒரு இடம் உருவாக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.

இது ஒரு தொடக்கம். ஆனால் இந்த தொடக்கம் வளர்ந்து, இனி வரும் காலங்களில் இதைப் போன்ற கதைகளும் படைப்பாளிகளும் சினிமாவிற்கு வர வேண்டும் என்றால், வியாபார ரீதியாக திரையரங்குகளுக்கு ஒரு சிறிய நம்பிக்கையை கொடுக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

தொடக்கத்தில் குறைந்த திரைகளில் தான் வெளியிட்டோம். குறைந்த திரைகளே கிடைத்தது. புனித வெள்ளியில் தொடங்கி, வாய்மொழி பாராட்டு பரவி, மேலும் பலரும் திரையரங்குகளுக்கு வந்து ஞாயிற்றுகிழமை ஈஸ்டர் நாளில் மக்கள் ஆதரவால் எங்கள் படம் உயிர்த்தெழும் என்று உறுதியாக நம்பினோம்.

ஆனால் ஈழத் தமிழ் சினிமாவுக்கான ஈஸ்டர் இன்னும் வரவில்லை. பல வருடங்களாக சிலுவையில் அறையப்பட்டிருக்கும் ஈழத் தமிழ் சினிமாவை உயிர்த்தெழச் செய்ய உங்களால் மட்டுமே முடியும். தயவு செய்து எங்கள் திரைப்படத்தை திரையரங்குகளில் சென்று பாருங்கள். அது உங்கள் நேரத்திற்கும் பணத்திற்கும் நிச்சயமாக மதிப்புடையதாக இருக்கும்.

இந்த படத்திற்கான ஓடிடி ஒப்பந்தம் இன்னும் முடிவாகவில்லை. எனவே சில வாரங்களில் ஓடிடியில் பார்க்கலாம் என்று நினைக்க வேண்டாம். சினிமாவின் உயிர்த்தெழுதல் திரையரங்குகளில் தான் நிகழும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (2)

Premanathan S, Cuddalore
2026-04-09 21:19:38

அவனவன் சமையல் காஸ் கிடைக்கலை, பெட்ரோல் விலை ஏறுது என்று கவலைப் படுகிறான் இந்த ஆளுக்கு சினிமாவை காப்பாற்ற வேண்டுமாம் அது சரிதான் கூத்தாடிக்கு கூத்து நடந்தாதான் சோறு


KayD, Mississauga
2026-04-09 16:11:48

நிச்சயம் படம் நல்லா தான் இருக்கும். இப்போ 40 45 வயதுக்கு மேல உள்ள ஆளுக்கு இந்த படம் புரியும்.. வலி தெரியும் ..அந்த வயதுக்கு மேல உள்ளவர்கள் தியேட்டர் பக்கம் வருவது குறைவு .. இளைஞர் கு தேவையான commercial elements இருக்காது அவர்களுக்கு இந்த கதையும் புரியாது. படத்தில் ஒரு முன்னுரையை சொல்லி இருந்தால் இன்னும் நிறைய பேருக்கு சென்று அடையும்.