உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தனுஷ் உடனான பிரிவு ஏன்? விக்னேஷ் சிவன் பதில்

தனுஷ் உடனான பிரிவு ஏன்? விக்னேஷ் சிவன் பதில்


சிம்பு நடித்த 'போடா போடி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார் விக்னேஷ் சிவன். அடுத்து தனுஷ் தயாரிப்பில் அவர் இயக்கிய 'நானும் ரவுடி தான்' படம் அவரை இன்னும் பிரபலமான இயக்குனராக அடையாளம் காட்டியது. இடையே தனுஷ் நடித்த 'வேலையில்லா பட்டதாரி' படத்தில் ஒரு சின்ன ரோலில் நடித்திருந்தார். பின்னர் சூர்யா நடிப்பில் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தை இயக்கினார்.

இதற்கிடையே நடிகர் அஜித்குமாரின் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தும் சில மாதங்களில் அது பறிபோனது. அந்த சமயத்தில் நடிகரும் இயக்குனருமான பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' (சுருக்கமாக 'எல்ஐகே') படத்தை இயக்கினார். நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்த இப்படம் வரும் ஏப்.,10ம் தேதி ரிலீசாகிறது.

இந்த நிலையில் 'எல்ஐகே' பட புரமோஷன்களில் பங்கேற்று வரும் விக்னேஷ் சிவனிடம், தனுஷ் உடனான நட்பு, பிரிவு பற்றி கேள்வி கேட்கப்பட்டது. விக்னேஷ் சிவன் கூறுகையில், “நடிகர் தனுஷை எனக்கு மிகவும் பிடிக்கும். நடிகர் என்பதை தாண்டி அவரை நான் உச்சத்தில் வைத்திருக்கிறேன். ஜூலை 28ம் தேதி தான் தனுஷுக்கு பிறந்த நாள். அதே ஜூலை 28ல் தான் என்னுடைய அப்பா இறந்தார். தனுஷிடம் என்னுடைய அப்பாவை நான் உணர்கிறேன். அந்த அளவுக்கு அவர் எனக்கு பிடிக்கும். ஆனால், சில நேரங்களில் சிலருடன் ஏன் நமக்கு முரண்பாடுகள் ஏற்படுகின்றன என்பது நமக்கே தெரியாது. அது குறித்து புரிந்துகொள்ள முடியவில்லை. சூழ்நிலைகள் அப்படி அமைந்துவிட்டன. தனுஷ் உடனான என்னுடைய நட்பு முறிவை என்னுடைய மிகப்பெரிய இழப்பாக பார்க்கிறேன்.

அதே சமயம் நல்ல நட்பு உறவுடன் இருக்கும் ஒருவரை நாம் இழக்கிறோம் என்றால் அதை அவமானமாகவும் பார்க்கிறேன். ஏதோ ஒரு இடத்தில் ஏதோ ஒரு தவறை செய்திருக்கிறேன். இன்று நான் இப்படி ஒரு இடத்தில் இங்கே இருக்கிறேன் என்றால், அதற்கு காரணம் தனுஷ். என்னுடைய இந்த நிலைக்கு அவர் முக்கியமான காரணம். 'வேலையில்லா பட்டதாரி' படத்தின் படப்பிடிப்பின்போது 2 ஆண்டுகளுக்கும் மேல் அவருடன் தான் இருந்திருக்கிறேன். அப்போது அவர் சாப்பிட்டால் தான் நான் சாப்பிடுவேன். அப்படியான ஒரு உறவில் இருந்தேன். ஒரு இரண்டு பேருக்கு இடையில் பிரச்னை இருந்தால் பேசி சரி பண்ணலாம் பிரச்னை இல்லாமல் விலகி இருந்தால் எப்படி சரி செய்வது'' எனக் கூறியுள்ளார்.

தனுஷ் தயாரித்த 'நானும் ரவுடி தான்' படத்தில் இயக்குனராக விக்னேஷ் சிவன் பணியாற்றினார். அந்த படத்தில் நடிகையாக நடித்த நயன்தாராவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதன் படப்பிடிப்பு சமயத்தில் தனுஷ், விக்னேஷ் சிவன் இடையே பிரச்னை எழுந்ததாக அப்போது பேசப்பட்டது. ஆனால், இருவரும் அதுப்பற்றி கருத்து தெரிவிக்கவில்லை. இதற்கிடையே விக்னேஷ் சிவன், நயன்தாரா திருமண ஆவணப்படத்தில் நானும் ரவுடி தான் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட வீடியோவை அனுமதியில்லாமல் பயன்படுத்தியதாக நஷ்டஈடு கேட்டு தனுஷ் வழக்கு தொடர்ந்தது, இவர்களிடையேயான பிரச்னையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !